துப்பாக்கிச் சூட்டில் என்.எல்.சி. தொழிலாளி பலி - வைகோ கண்டனம்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இரண்டாம் சுரங்கத்திற்குச் சென்ற அஜீத் நகரைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி 28 வயது இளைஞர் ராஜா என்பவரை இரண்டாம் சுரங்க நுழைவாயிலில் காவல் பணியில் இருந்த மத்திய துணைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் மூன்று ரவுண்டு சுட்டுள்ளார். இதனால், அந்தத் தொழிலாளி தலை சிதறி கோரமான முறையில் அதே இடத்தில் உயிரிழந்தார்.
என்.எல்.சி. சுரங்கம், அனல் மின் நிலையம் மற்றும் தொழிலகங்கள் பாதுகாப்புக்காக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, என்.எல்.சி. தொழிலாளர்களுடன் மோதல் சம்பவங்களும், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் இத்தகைய போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது. இனி இதுபோன்ற கோர சம்பவங்கள் நடக்காமல், தொழிலாளர்களின் பாதுகாப்பை என்.எல்.சி. நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளி ராஜா குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனைவி மற்றும் இரு குழந்தைகளை கண்ணீர்க் கடலில் மூழ்கடித்துவிட்டு உயிர் பலியான ராஜா குடும்பத்துக்கு ரூபாய் 10 இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்..