பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கும் திருமாவளவன்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் அரசு பணியும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: பஸ் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் மக்கள் கொந்தளிப்பார்கள் என்றும் அரசு பணியும் என்றும் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறோம் என்றும், பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆட்சியாளர்கள் கூறுவது ஏற்புடையதல்ல.
ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் விதத்தில் பேருந்து கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியுள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்காகக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஒரு சில பேருந்துகளை வைத்திருக்கும் தனியார் கூட லாபம் ஈட்டும் போது அரசு பேருந்துக் கழகங்கள் நட்டமடைந்துவிட்டன எனக் கூறுவது அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதை ஏற்கெனவே கணக்குத் தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
போக்குவரத்து கழகத்தை அரசு நிறுவனமாக மாற்ற வேண்டும். போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் மாநிலம் முழுவதும் வெடிக்கும். மக்கள் போராட்டத்தைப் பார்த்து மாநில அரசு பணியும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். 24 ஆம் தேதியன்று மாவட்ட தலை நகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என்றும் கூறினார்.