தூத்துக்குடியில் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம்: வேல்முருகன் கட்சியினர் 6 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின் கோபுரத்தில் ஏறி போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பாமக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் 6 பேர் முத்தையாபுரம் அருகே உள்ள சுந்தர்நகர் பகுதியில் இருக்கும் 70 அடி உயர மின் கோபுரத்தில் சுமார் 20 அடி உயரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதி பொது மக்கள் திகைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோபுரத்தில் இருந்து அவர்களால் கீழே இறங்க முடியவில்லை.
இதையடுத்து முத்தையாபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். கீழே இறக்கப்பட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடி அத்துமீறி மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பதட்டமாக இருந்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேல்முருகனின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications