சமூக வலைத்தளங்களில் விஜயை கிண்டல் செய்றாங்க.. மதுரை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்
மதுரை: இணையதளங்களில் நடிகர் விஜய் கேலி, கிண்டலுக்கு உள்ளாவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் நேற்று தங்கள் மாவட்ட காவல்துறையிடம் இதேபோன்ற புகார் அளித்த நிலையில், தமிழகத்தின் பல நகரங்களிலும் இதுபோன்ற புகார்கள் அளிக்கப்பட உள்ளதாம்.
குமரி மேற்கு மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் ஜோஸ்பிரபு தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் சகாயம் உள்பட பல ரசிகர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: நடிகர் விஜய் மக்களுக்கு செய்யும் நற்பணிகளை தமிழக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக விஜய்யையும், அவருடைய குடும்பத்தாரையும் இணையதளம் மூலம் அவமானப்படுத்தியும், அருவருக்கத்தக்க, சகிக்க முடியாத வாசகங்களால் சித்தரித்தும் வந்து கொண்டிருக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இணையதள முகவரியில் இருந்த ட்ரோல் செய்த பக்கம் நீக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்தப் பக்கம், வேறு பெயரில் செயல்படத்தொடங்கி, வழக்கம்போல் அவதூறுகளை பரப்பி வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள லட்சோப லட்ச ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம். எனவே விஜய் நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் இணையதளத்தை இயக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்தும், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள அருவருக்கத்தக்க பக்கங்களை நீக்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள், மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் புகார் மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர்.
அதில் "விஜய் அவர்களால் மக்கள் இயக்கம் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, மேற்படி இயக்கத்தில் நான் மாவட்ட தலைவராக பொறுப்பு வகிக்கின்றேன். விஜயின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அருவெறுக்கத்தக்க வசனங்களுடன் விஜயை தொடர்புபடுத்தி சமூகவலைதளங்களில் பதிவுகள் அதிகம் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பாக, ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில நாட்கள் ஓய்ந்திருந்த தரக்குறைவான பதிவுகள் மீண்டும் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மீம்ஸ் உருவாக்குவதாக கூறி 2 பேஸ்புக் பக்கங்கள் மற்றும் 1 டிவிட்டர் பக்கத்தின் முகவரியை புகாரில் இணைத்து கொடுத்தனர்.
இதுபோல தேனி உள்ளிட்ட பல நகரங்களிலும் ரசிகர் மன்ற நிர்வாகிகள், காவல்துறையிடம் புகார் அளிக்க தொடங்கியுள்ளனர். டிவிட்டர், பேஸ்புக்வாசிகளே, கொஞ்சம் உஷாரா இருங்கப்பா..