ரூ.500 கோடி தேமுதிக அறக்கட்டளை நிதி... விஜயகாந்த் வெள்ளை அறிக்கை விடுவாரா?- எஸ்.ஆர். பார்த்திபன்
சென்னை: தேமுதிக அறக்கட்டளை நிதியில் ரூ.500 கோடியை விஜயகாந்த் முறைகேடு செய்துள்ளதாக மாஜி எம்எல்ஏவும், மக்கள் தேமுதிக நிர்வாகியுமான எஸ்.ஆர்.பார்த்திபன் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக கூறிய பார்த்திபன், ரூ.500 கோடி விவகாரம் தொடர்பாக விஜயகாந்த் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எஸ்.ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதில் அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கினர்.
பின்னர் திமுகவுடன் மக்கள் தேமுதிக கூட்டணி சேர்ந்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து திமுகவுடன் இணைவது என்று மக்கள் தேமுதிக நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதன் இணைப்பு விழா விரைவில் நடக்க உள்ளது.
தொடக்க முதலே விஜயகாந்த் மீது மக்கள் தேமுதிக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இன்று அவர் மீது முறைகேடு புகாரை கிளப்பியுள்ளார் மாஜி எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக அறக்கட்டளை நிதியில் ரூ.500 கோடியை விஜயகாந்த் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியத்தில் 678 தே.மு.தி.க. கிளைகளும், மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, மாநகராட்சி, 33 பேரூராட்சி வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், 89 வார்டு நிர்வாகிகள் என மொத்தம் 767 கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
15000 பேர் ஐக்கியம்
சேலம் மாவட்டத்தில் அவைத்தலைவர், துணை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மகளிரணி, இளைஞர்அணி, கேப்டன் மன்றம், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், அமைப்புசாரா தொழிற்சங்க நிர்வாகிகள் என மொத்தம் 15 ஆயிரம் பேர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையபோவதாக கையொப்பம் இட்டு அதில் அவர்களது வாக்காளர் அட்டையின் நகலையும் இணைத்து சேர்ந்துள்ளனர்.
17ம் தேதி இணைப்பு
அனைவரும் முறைப்படி வருகிற 17ம்தேதி சேலம் கோட்டை மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள மக்கள் தே.மு.தி.க. இணைப்பு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர். 1 லட்சம் தே.மு.தி.க. தொண்டர்களை படிப்படியாக தி.மு.க.வில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
தற்கொலைக்குச் சமம்
தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகள் அணி அணியாக வெளியேறி தினமும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை இணைத்து வருகின்றனர். தி.மு.க.வில் இணைந்தால் தான் அரசியல் எதிர்காலம் நம்பிக்கையாக இருக்கும். தன்மானத்தோடு, சுயமரியாதையோடு இருக்க வேண்டுமானால் தி.மு.க. கட்சியே சிறந்ததாகும். இனி தே.மு.தி.க. என்ற இயக்கத்தை நம்பி இருப்பது தற்கொலைக்கு சமமாகும்.
ஊழல்வாதி விஜயகாந்த்
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஊழல்வாதி என்பது தே.மு.தி.க. டிரஸ்ட் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ரூ.500 கோடியை தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் வழங்கிய நிதியை முறைகேடாக மோசடி செய்துள்ளார். அதற்கு ஆதாரம் உள்ளது.
வறுமை மட்டுமே பரிசு
விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்களை தவிர மற்றவர்கள் அறக்கட்டளை நிர்வாகியாக நியமிக்கப்படவில்லை. ரூ.500 கோடி தொடர்பாக விஜயகாந்த் வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டல் வழக்கு தொடரப்படும். வறுமையை ஒழிப்போம் என்ற விஜயகாந்த், வறுமையை மட்டுமே தொண்டர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
வெள்ளை அறிக்கை
ஒருமாதமாக நான் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக விஜயகாந்த் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை எந்த ஒரு பதிலையும் அவர் அளிக்கவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு
டிரஸ்ட் அந்த நிதியை முறைகேடாக பயன்படுத்தி ரூ.1 கோடி மதிப்பில் சொகுசு கார் ஒன்றை விஜயகாந்த் வாங்கி உள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டு ரூ.500 கோடி மோசடி செய்தது விரைவில் வெளி கொண்டு வரப்படும்.
குடும்ப பாசம்
செயல்படாத தலைவர் தன் குடும்பத்திற்காக மட்டும் சிந்திக்கும் தலைவர், 48 பேருக்கு மாவட்ட செயலாளர், மாநில நிர்வாகிகள், உயர்மட்டகுழுவினர் என விஜயகாந்த் உறவினர்களுக்கு பதவி வழங்கி இருப்பது குடும்ப பாசத்தை உணர்த்துகிறது.
நம்பி பயணில்லை
இனியும் தே.மு.தி.க. தொண்டர்கள் விஜயகாந்தை நம்பி பயனில்லை. அனைவரும் உடனடியாக வெளியேறி தமிழர்கள் உணர்வோடு கலந்த இயக்கம், தமிழர்களுக்காகவும், தமிழர்கள் நலனுக்காகவும் அயராது உழைத்து வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றுபட்டு உழைப்போம், வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் எஸ்.ஆர். பார்த்திபன் கூறியுள்ளார்.