நெல்லை மாவட்டத்தில் 4 அணைகளில் இருந்து நீர் திறப்பு
தென்காசி: நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்காக 4 அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அடவி நயினார் கோவில் நீர்தேக்கம். 132 அடி உயரம் கொண்ட இந்த
நீர்த்தேக்கம் மூலம் மேக்கரை, அச்சன்புதூர், வடகரை, இலத்தூர், இடைகால், சாம்பவர்வடகரை, சுரண்டை, வீ.கே.புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 453 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது அணையில் 123 அடி நீர் உள்ளது. இந்த அணையில் இருந்து இன்று 16.11.2015.காலை 9.30 மணிக்கு நீர் திறந்து விடப்பட்டது. நீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் அதிகாரிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதே போல் 72 அடி கொள்ளளவுக் கொண்ட கடையநல்லூர் கருப்பாநதி நீர்தேக்கம் நிரம்பியுள்ளது.
இந்த நீர்தேக்கத்தில் இருந்து இன்று பிசான சாகுபடிக்காக 9 ஆயிரத்து 518 ஏக்கர் விவசாய நிலங்ககள் பயன் பெரும் வண்ணம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், மாநிலங்களவை உறுப்பினர் முத்துகருப்பன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு நெல்லை மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி, கடனா நதி, அடவி நயினார், ராமநதி ஆகிய 4 நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 32 ஆயிரத்து 24 ஏக்கர் நிலங்களில் பிசான சாகுபடிக்காக இந்த அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 1.03.2016 வரை தண்ணீர் திறந்து விடப்படும்.
மழையின் மாற்றத்தைப் பொருத்து தண்ணீர் விநியோகம் மாற்றியமைக்கப்படும் என்றார்.