சென்னை மாநகரின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன?
சென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதுவும் ஜூலை 15ம் தேதிக்கு மேல் முக்கிய பகுதிகளில் கூட சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யமுடியவில்லை என்பதால் சென்னைவாசிகள் காலி குடங்களை எடுத்துக்கொண்டு லாரிகளில் வரும் தண்ணீரைப் பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் இருக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னையின் தண்ணீர் நிலைமை, வறண்ட ராஜஸ்தான் நிலைமையைவிட மோசமாகத்தான் இருக்கிறது. எந்த ஏரியாவில் தண்ணீர் கிடைக்கும் என்று தேடி அலைவதே இன்றைக்கு பெரும்பாடாக இருக்கிறது சென்னைவாசிகளுக்கு. தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது.
இலவச அறிவிப்புகளை போட்டி போட்டுக்கொண்டு வெளியிடும் அரசுகள் சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் அடிப்படை பிரச்சினையான தண்ணீர்ப் பிரச்சினையை தீர்ப்பதில் முனைப்புக் காட்டுவதில்லையோ என்று தோன்றுகிறது.
குடிநீர் விநியோகம் நிறுத்தம்
கடந்த ஜூலை மாதம் 15ம் தேதிவரை தண்ணீர் விநியோகம் ஒருநாள் விட்டு ஒருநாள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கையடி பம்புகள் மூலம் வந்து கொண்டிருந்த தண்ணீர் எந்தவித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இன்று வரும், மாலை வரும் என்று நம்பிக்கையோடு அடித்துப் பார்த்தால் அடிபம்புகளில் வெறும் காற்றுதான் வருகிறது.
வெற்றிகரமான 12வது நாள்
மயிலாப்பூரில் அடிபம்புகளில் சீரான அளவில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகிவிட்டது. எங்கோ ஒருமூலையில் தெருகுழாய்களில் வரும் தண்ணீரை ஓடி ஓடி அடித்து பிடிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவில் மட்டுமே பார்த்து பழகிய குழாயடிச்சண்டைகளை நேரிலேயே பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் அருமை நிழலில் என்பது போல மெட்ரோ வாட்டரின் அருமை பஞ்சத்தில்தான் தெரிகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு
12 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2003இல் போதிய பருவ மழை இன்மையால் சென்னையில் கடுமையான தண்ணீர்த் தட்டப்பாடு ஏற்பட்டது. அந்த நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் சொல்கிறது. அதைக்கூட ஊடகங்கள் கேள்வி எழுப்பிய பிறகுதான் அரசு நிர்வாகம் பேசுகிறது.
ஏரிகளில் குறைவு
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வேகமாக வறண்டுபோயின. இதில் சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டது. வீராணம் ஏரியிலும் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் தான் உள்ளது. தற்போது அங்கிருந்து தான் சென்னைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர் இருப்பு எவ்வளவு
மழை இன்மையால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதும் நின்று விட்டதால், பூண்டி ஏரியின் நீர் மட்டம் 52 மில்லியன் கன அடியாகக் குறைந்து விட்டது. ஏரிகளில் உள்ள நீரின் தற்போதைய இருப்பு மொத்த கொள்ளளவில் 10 சதவிகிதம்தான்.
வருணபகவானுக்கு பூஜை
ஆந்திராவிடம் கிருஷ்ணா நீரைக் கேட்டு நிற்பதைவிட கடவுளிடம் மழை வேண்டி யாகம் செய்யலாம் என்று முடிவு செய்த சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிப்பதற்காக மழை வேண்டி வருண பகவானுக்கு பூஜைகள் செய்கின்றனர் எழும்பூர் தாசப்பிரகாஷ் அருகில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மழை வேண்டியாகம் நடத்தப்பட்டது.
கருணைகாட்டிய மழை
பாரிமுனையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலும் வருணபூஜை நடத்தப்பட்டது. அதனால்தானோ என்னவோ சென்னையில் கடந்த 15 நாட்களாகவே இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. இது சற்றே மக்களை நிம்மதியடையச் செய்திருக்கிறது.
குடிநீர் விநியோகம்
சென்னை குடிநீர் வாரியம் முன்பு 83 கோடி லிட்டர் குடிநீரை விநியோகித்தது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக 55 கோடி லிட்டர் குடிநீர் தான் நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கும் சிக்கல் வந்து விட்டது. தாய்மார்கள் காலிக் குடங்களுடன் குடிநீருக்காக அலையும் அவல நிலை தான் தற்போது எங்கும் நிறைந்துள்ளது.
அலட்சிய அதிகாரிகள்
குடிநீர் வாரிய அதிகாரிகளோ ப்ரசர் இல்லை, தண்ணீர் ஏறலை என்ற பதிலையே கூறுகின்றனர். லாரி தண்ணீராவது விடுங்கப்பா என்றால் ஏரியாகாரங்க எல்லாம் மொத்தமாக மனு எழுதி கொடுங்க அனுப்பறோம் என்று கூறி தப்பித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் அடிபம்ப் குழாய்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டு லாரிகளில் தண்ணீர் விநியோகம் தொடங்கியுள்ளது.
சென்னையில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினை குறித்து ஊடகங்களில் வரிந்து கட்டி எழுத, திமுக தலைவர் கருணாநிதியோ நான்தான் சொன்னேன்ல என்று அறிக்கை விடுகிறார்.
சுட்டிக்காட்டும் கருணாநிதி
திமுக ஆட்சியில் நெம்மேலியில் தொடங்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ள கடல்நீரைக் குடி நீராக்கும் நிலையம் தவிர, அதற்கு அருகே, அதிமுக ஆட்சியில் 2013இல் அறிவிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டு நிலையங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டாகும்
காலி குடம் போராட்டம்
கொளத்தூர் தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு என காலி குடங்களுடன் போராட்டத்தை நடத்தினார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். பெண்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார் மேயர் சைதை துரைசாமி.
பிரச்சினை தீரலையே
சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் அரசு, தண்ணீர் விநியோகத்தை சிறப்பாகச் செய்வதாக புள்ளி விவர அறிக்கை விட்டார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் அறிக்கை விடுகிறார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர். என்னதான் அறிக்கை விட்டாலும் சென்னை மாநகராட்சியின் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
காற்று வரும் குழாய்கள்
சமூக வலைத்தள காலத்தில் அரசியல் கட்சிகள் மாறி மாறி புள்ளிவிவரங்கள் விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் தங்களுடைய வீட்டு குழாய்களில் தண்ணீர் வருகிறதா காற்று வருகிறதா என்று நேரலையில் உலகத்துக்கு காட்டும் காலம் இது.
நல்ல நிர்வாகமா?
நல்ல நிர்வாகத்துக்கு அழகு, என்ன பிரச்சினைகள் வரும் அதை எப்படி சமாளிக்கலாம் என்பதை முன்கூட்டியே அறிந்து செயலாற்றுவதாகும். போதிய மழை இல்லை என்பதும், ஏரிகளில் தண்ணீர் இருப்பு இல்லை என்பதும் தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல், முன்னறிவிப்பு கூட செய்யாமல் மக்களை அலைகழிக்கச் செய்வது எந்த வகையில் நல்ல அரசு நிர்வாகத்துக்கு உதாரணமாக முடியும்?
எதிர்கால திட்டம் என்ன?
சென்னையில் மிகமுக்கிய ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. ஏரி நிலங்களை தனியாருக்கு வாரி வழங்கிவிட்டு, இன்று ஏரி பரப்பு குறைந்துவிட்டது, ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதனால் தண்ணீர் குறைந்துவிட்டது என்று மக்களை தண்ணீருக்காக லாரிகளை நோக்கி கையேந்த வைத்திருக்கிறது அரசு.
நிலத்தடி நீர் குறைவு
நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. சென்னை மெட்ரோ நகரம், வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறது? நிலத்தடியில் நன்னீர் குறைந்துவிட்டால் உப்புநீர் புகும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் இதை எதிர்கொள்ள என்ன மாற்று திட்டங்களை வைத்திருக்கிறது?
அடிபம்புகளுக்கு மாற்று
தமிழக கிராமங்களில் வீட்டுக்கு வீடு குழாய் இணைப்புகள் மூலம் தண்ணீர் விநியோகம் நடக்கிறது. அப்படியிருக்க சென்னையில் அரதப் பழசான கையடி பம்புகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கும் முறை நவீனப்படுத்தப்படுமா?
மழையால் நீர்வரத்து
வருணாபகவானின் புண்ணியத்தில் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடையும் வகையில் மழை பெய்கிறது. ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் வறட்சியின் பிடியில் இருந்து ஏரிகள் தப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கும் விசயம்தான்.
நிரந்தர தீர்வு என்ன?
மழைக்காலத்தில் வீணாகும் மழைநீரை சேமிக்க ஏதேனும் திட்டமிருக்கிறதா? இந்த ஆண்டு சரியான அளவில் மழை பெய்தால் தண்ணீர் பிரச்சினை ஒருவழியாகத் தீர்ந்து விடும். ஆனால் சென்னைவாசிகளின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க என்ன திட்டம் வைத்திருக்கிறது அரசு? ஆளும், ஆள நினைக்கும் அரசியல் தலைவர்கள் இதற்கு பதில்சொல்வார்களா?