மீனவர் பிரச்சினையில் பாஜகவுக்கு இரட்டை நிலைப்பாடு இல்லை... ஜெ. குற்றச்சாட்டிற்கு தமிழிசை பதிலடி
கடலூர்: தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய பாஜக அரசு இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நேற்று தூத்துக்குடியில் உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாகத் தாக்கிப் பேசியிருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு தனது பிரச்சாரத்தின் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

இது தொடர்பாக, விருத்தாசலத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து தமிழிசை மேற்கொண்ட பிரச்சாரத்தில் கூறியதாவது:-
தொடரும் சாதனைகள்...
தூத்துக்குடியில் பிரசாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரம் பின்னுக்கு சென்று விட்டதாக கூறி இருக்கிறார். மோடி ஆட்சிக்கு வந்தபோது பொருளாதாரம் 3.5 சதவீதமாக இருந்தது. இப்போது இது 5.5. சதவீதமாக உயர்ந்து உள்ளது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே இந்த சாதனையை நிகழ்ச்சி இருக்கிறார். தொடர்ந்து அவர் சாதனைகளை நிகழ்த்துவார்.
பேச்சுவார்த்தை...
மீனவர் பிரச்சினையில் பாரதீய ஜனதா இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். நாங்கள் இரட்டை வேடம் போடவில்லை. மீனவர் பிரச்சினைகள் தீரவேண்டும் என்பதற்காக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதே நாங்கள்தான்.
தேசியகட்சிக்கு வாய்ப்பு...
தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. எங்கள் வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். கடத்தப்படுகிறார்கள். தேசிய கட்சிக்கு ஒருமுறை நீங்கள் வாய்ப்பு தாருங்கள்' என இவ்வாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவசர கதியில் தேர்தல்...
தனது கடலூர் பிரச்சாரத்தில் தமிழிசை கூறியதாவது:-
கடலூர் நகராட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே இருந்த தலைவர் ராஜினாமா செய்த உடனே, எதிர்கட்சிகளுக்கு கால அவகாசம் கொடுக்காமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேட்பாளர்களை தேர்வு செய்த பிறகுதான் தேர்தல் தேதியே அறிவிக்கப்படுகிறது.
வீணாகும் வரிப்பணம்...
மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். இந்த தேர்தலால் மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. மோடியின் நல்லாட்சி, நகராட்சியின் என்ற கோஷத்துடன் தேர்தலை சந்திக்கிறோம். இந்த தேர்தலில் நீங்கள் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட்டால், அடுத்த ஆண்டே மீண்டும் ஒரு தேர்தல் வரும். பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்தால் மக்களுக்கு நல்லது நடக்கும். அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications