கொளத்தூரில் ரயில்வே மேம்பாலம் என்ன ஆச்சி.. ஸ்டாலின் கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி எஸ்கேப் பதில்
கொளத்தூர் தொகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது என்ன ஆச்சு என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என எஸ்.பி. வேலுமணி பதில் அளித்தார்.
சென்னை: இன்று கூடிய தமிழக சட்டசபை கூட்டத் தொடரில், வில்லிவாக்கம் தொகுதியில் 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, வில்லிவாக்கம் தொகுதியின் திமுக எம்எல்ஏ ரங்கநாதன், வில்லிவாக்கத்தில் விபத்து அதிகம் நடக்கக் கூடிய ஜி.கே.எம். காலனி பட்மேடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பெரம்பூர் ஐ.சி.எப். மற்றும் சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்று பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஜி.கே.எம். காலனி கொளத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்ட அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி 7 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதிபெறப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படவில்லை என்று புகார் கூறினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனியார் நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மேம்பால பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.