ஆறுகளின் ஆன்மாக்களுக்கு விடுதலை... கொஞ்சம் இளைப்பாறுவாய் காவேரி
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடும்படி உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடும்படி உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஒரு உத்தரவு டெல்டா மாவட்டங்களில் செய்யப்போகும் மாற்றங்கள் சாதாரண விஷயமாக இருக்க போவதில்லை.
டெல்டாவில் உள்ள சில ஊர் மக்களின் 25 வருட வாழ்க்கை முறையையே இந்த ஒரு தீர்ப்பு மாற்ற உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு புதிய புரட்சி.
காவிரியில் மக்கள் மூழ்கி இறப்பது தொடங்கி வந்த தண்ணீர் மொத்தமும் ஒரு வாரத்தில் காணாமல் போவது வரை அனைத்தையும் இந்த ஒரு தீர்ப்பு மாற்ற போகிறது.
சாதி
டெல்டாவில் நடந்த மணல் கொள்ளைக்கும் அங்கு நடக்கும் ஜாதிய பிரச்சனைக்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது. மணல் மாஃபியாக்கள் பொதுவாக மணல் கொள்ளைகளில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது என சாதியை பகடை காயாக பயன்படுத்தி வந்தனர். மணல் எடுப்பதிலும், ஆறுகளில் லாரிகளை வைத்து இடம் பிடிப்பதிலும் நிறைய சண்டைகள் ஏற்பட்டு இருக்கிறது. இதே சண்டைகள் ஊர் சண்டையாகவும், சாதி சண்டையாகவும் மாறியிருக்கிறது.
மணல் கொலைகள்
மணல் லாபி யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில் டெல்டாவை ஆட்டிப்படைத்து கொண்டு இருந்தது. கடந்த 25 வருடத்தில் இந்த மணல் மாஃபியா பிரச்சனை காரணமாகவே பலர் கொல்லப்பட்டும், மிரட்டப்பட்டும் உள்ளனர். நிறைய சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிராக பேசியதால் நிறைய பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.அந்த சமூக ஆர்வலர்களின் கனவுகள் ஒரே நாள் மதியத்தில் வெளியாகிய தீர்ப்பு மூலம் நிஜமாகி இருக்கிறது.
மறைமுக அரசியல்
இந்த மணல் கொள்ளை டெல்டா மாவட்ட பஞ்சாயத்துகளில் பல மறைமுக ஊழல்களுக்கு காரணமாக இருந்தது. ஒரு லாரியை ஊருக்குள் விடுவதற்கு இவ்வளவு பணம் என்று வசூலிக்கப்பட்டு வந்தது. லாரி ஒப்பந்தங்கள் மறைமுகமாக எடுக்கப்பட்டு நிறைய பணம் கைமாறியது. ஆறுகளை அறுவை சிகிச்சை செய்ய பல கோடிகள் இதில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அந்த மறைமுக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனது
இந்த மணல் கொள்ளையால் பல சிறிய வாய்க்கால்களின் வழித்தடங்கள் காணாமல் போய் இருக்கிறது. நூறு நாள் வேலைகளில் இந்த வாய்க்களுக்கு இடையில் பாதைகளை உருவாக்கப்பட்டது. மொத்த வாய்க்கால் நீர் பாசனமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆறுகளில் தண்ணீர் இல்லை, இருக்கும் தண்ணீரும் ஓடிவிடுகிறது என்பதால் பல வாய்க்கால்கள் மீது மணல் கொட்டி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது. தற்போது இவைகள் மீண்டும் உயிர்த்தெழும் நாள் உருவாகியுள்ளது.
மணல் கடத்தல்
வாரம் ஒருமுறையாவது முன்பெல்லாம் கேரளாவுக்கு 'மணல் கடத்திய லாரி பறிமுதல்' என்ற செய்திகள் வரும். கேரளாவில் 2013ல் மணல் குவாரிகள் மூடப்பட்டதில் இருந்து அவர்களின் ஒரே நம்பிக்கை காவேரி மட்டும்தான். காவேரியில் தண்ணீர் இல்லை, நிறைய மணல் இருக்கிறது என லாரி லாரியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. கேரளாவில் இருக்கும் 10ல் ஒரு வீடு தமிழக மணலில் கட்டியது என்று கூட சொல்லலாம். தற்போது அந்த மணல் கடத்தல் முடிவுக்கு வந்துள்ளது.
எத்தனையோ வழக்குகள்
டெல்ட்டா மாவட்ட விவசாயிகளும், பல சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து பல நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான மணல் கொள்ளை, மணல் குவாரி சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகள் அனைத்திற்கும் ஒரே நாளில் ஒரே தீர்ப்பு முடிவு வழங்கி இருக்கிறது. இது டெல்டா விவசாயிகளின் பல நாள் கனவு என்று கூட சொல்லலாம்.
மீண்டும் வா காவேரி
தண்ணீர் இல்லாத காவேரிதான் புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் பிரச்சனைக்கும், மன்னார்குடி மீத்தேன் பிரச்சனைக்கும் முக்கிய காரணமாக இருந்தது. தண்ணீர் இல்லாமல், விவசாயம் செய்ய முடியாமல் இருந்த விவசாயிகளிடம் நிலத்தை வாங்குவது மிகவும் எளிமையான காரியமாக இருந்தது. தற்போது காவேரியில் நடந்து வந்து கொள்ளைகளுக்கு முடிவு கட்டப்பட்டு இருக்கிறது. அங்கு ஓடிய லாரிகள் எவ்வளவு அரசியல் செய்ததோ அதேபோல் இனி அங்கு ஓடும் தண்ணீரும் 'நல்ல அரசியல்' செய்யும்.