20 தொகுதி இடைத் தேர்தல் நடந்தால்.. இந்த 3 கட்சிகளுக்கும் லாபம் கிடைக்குமாம்! #survey
Recommended Video
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டசபைத் தொகுதிகளுக்கும் குறித்த காலத்தில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால் திமுக, தினகரன் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கே அதிக லாபம் கிடைக்கும் என்று நமது வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்தடுத்து நடைபெற்று வரும் மாற்றங்களால் அடுத்து என்ன நடக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
ஒரு சூப்பர்ஹிட் மசாலா படம் போல போய்க் கொண்டிருக்கிறது தமிழக அரசியல் சூழல். இந்த நிலையில் 20 தொகுதிகள் மொத்தமாக காலியாகியுள்ளன. தமிழக வரலாற்றில் இப்படி இத்தனை தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறையாகும். சரி இதற்கு இடைத் தேர்தல் நடந்தால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று கேட்டிருந்தோம்.. வந்த முடிவு இதோ!
[அடுத்த முதல்வர் யாரு.. நம்ம வாசகர்களின் கருத்து இதுதான்... ஒரு கலகல சர்வே!]
திமுகதான் வெல்லும்
சமீப காலமாக மக்கள் மனதில் திமுகவே முதலிடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதிலும் திமுகவே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதாவது மொத்த வாக்குகளில் 52.3 சதவீத வாக்குகளை அதாவது 13,982 வாக்குகளை திமுக கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த 20 தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூரில் மட்டுமே திமுக வென்றது நினைவிருக்கலாம்.
2வது இடம் தினகரனுக்கு
தினகரனின் அமமுக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இக்கட்சிக்கு மொத்த வாக்குகளில் 13.99 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. 20 தொகுதிகளில் 18 தொகுதிகளில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தினகரனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனுக்கு 3வது இடம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்த வரிசையில் 3வது இடத்தை வாசகர்கள் கொடுத்துள்ளனர். மொத்த ஆதரவில் 10.61 சதவீத ஆதரவு கமல் கட்சிக்கு கிடைத்துள்ளது.
4வது இடத்தில் அதிமுக
அதிமுக 4வது இடத்தில்தான் வருகிறது. அதாவது 6.86 சதவீதம் பேர் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சாதாரண கருத்துக் கணிப்பிலேயே அதிமுக 4வது இடத்திற்கு வந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது. அதை விட முக்கியமாக, 20 தொகுதிகளில் 19 அதிமுக கடந்த முறை வென்றவையாகும்.
மற்றவர்களுக்கும் வாய்ப்பு
இதில் இடம் பெறாத மற்ற கட்சிகள் வெல்வார்கள் என்று 3.97 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகள் அடக்கமாகும் என கருதலாம்.
பரிதாப பாஜக
பாஜகவுக்கு இந்த வரிசையில் வெறும் 1.86 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் பாஜகவுக்குக் கிடைத்திருப்பது 497 வாக்குகள் மட்டுமே. இது ஜஸ்ட் நமது வாசகர்களின் கருத்துத்தான். ஒட்டுமொத்த 20 தொகுதி வாக்காளர்களின் தீர்ப்பு தேர்தலுக்குப் பிறகுதான் தெரிய வரும். பொறுத்திருப்போம்.