வட சென்னையிலிருந்து கள அரசியலுக்குள் வலது காலை எடுத்து வைத்த கமல்..!
டுவிட்டர் பக்கத்திலேயே கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசன் இன்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
Recommended Video
சென்னை : டுவிட்டர் பக்கத்திலேயே கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசன் இன்று எண்ணூர் துறைமுகத்துக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். அதற்கு பதிலடியாக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் சில கருத்துகளை தெரிவித்து வந்தார். அதிலும் கமல்ஹாசனுக்கு சவால் விடும் தொனியில் பேசியவர் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக தெரிவித்த கமல்ஹாசனை, அரசியல் என்பது முள்படுக்கை போன்றது, அதற்குள் வந்தால்தான் உண்மை தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
அத்தைக்கு மீசை முளைகட்டும்
மேலும் டுவிட்டரில் ஜல்லிக்கட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழக அரசை குற்றம்சாட்டி கமல் கருத்துகளை பதிவிட்டு வந்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும், அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்றார்.
மக்கள் சேவை
நடிகர் கமல்ஹாசனின் ஒவ்வொரு டுவீட்டுக்கும் தமிழக பாஜக தலைவர்களான தமிழிசையும், எச்.ராஜாவும் பதிலடி கொடுத்து வந்தனர். அவர்கள், கமல் முதலில் டுவிட்டரை விட்டுவிட்டு மக்கள் பணிகளில் இறங்க வேண்டும். அதன் பிறகு அவர் அரசியலுக்கு வரலாம் என்றனர்.
களத்தில் இறங்க வேண்டும்
பெரும்பாலான தமிழக அமைச்சர்களால் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் அரசியல்வாதி என்றே அழைக்கப்பட்டார். இந்நிலையில் விரைவில் கட்சித் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த கமல் தான் மக்கள் பணிகளிலும் இறங்குவேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.
எண்ணூர் துறைமுகத்தில்...
கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என்று நேற்று கமல் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வேளையில் இன்று அதிகாலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுகப் பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அரசியலுக்கு ரெடி
இதன் மூலம் அத்தைக்கு மீசை முளைத்துவிட்டது என்று அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு நடிகர் கமல் சொல்லாமல் சொல்லிவிட்டார். மேலும் மக்கள் பணிகளில் நேரடியாக ஈடுபட்டதன் மூலம் இனி விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.