"அக்ரி" ஆப்பு வைத்த அதிகாரியின் தற்கொலை விவகாரம்! அமைச்சர் பதவியும் போகிறது?
சென்னை: தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சி பதவி பறிக்கப்பட்டதற்கு நெல்லை வேளாண்துறை அதிகாரியின் தற்கொலை விவகாரம்தான் காரணம் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த விவகாரத்தால் எந்த நேரத்திலும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் எனவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி திருமால் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. திருநெல்வேலியில் வேளாண்மைப் பொறியியல் துறையில் செயற்பொறியாளர் பதவியை கூடுதலாக வகித்து வந்தவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்ட வேளாண்துறையில் 7 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனை நிரப்புவதற்கு மாவட்ட ஆட்சியரை உள்ளடக்கிய குழுவை முத்துக்குமாரசாமி நியமித்தார்.
இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி பட்டியலை வாங்கி அவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார். ஆனால் சென்னையில் "துறை" அமைச்சரின் உதவியாளர்கள் எனக் கூறிக் கொண்டு செல்போனில் முத்துக்குமாரசாமியை அழைத்தவர்கள், தாங்கள் சொல்லும் நபர்களுக்கே பணி வழங்க வேண்டும்.. இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றெல்லாம் மிரட்டியிருக்கின்றனர்.
நேர்மையான அதிகாரியான முத்துக்குமாரசாமியோ இதை நிராகரித்துவிட்டார். ஆனாலும் நெருக்கடி தொடர்ந்தும் அதிகரிக்க வேறுவழியில்லாமல் சென்னை வந்து தலைமைச் செயலகத்தில் 'சம்பந்தப்பட்ட'வர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதுவும் முடியாது போக பேசாமல் மருத்துவ விடுப்பு கொடுங்கள் என்றும் கெஞ்சிப் பார்த்திருக்கிறார். எதுவும் நடக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து சென்னையில் மீண்டும் வந்த செல்போன் அழைப்புகளில், நீங்கள் நியமித்த ஆட்களையே போட்டுவிடுங்கள்.. ஆனால் அவர்களிடம் இருந்து எங்களுக்கான பணத்தை வாங்கிக் கொடுங்கள் என்று முத்துக்குமாரசாமி மிரட்டப்பட்டிருக்கிறார்.
இதில் அச்சப்பட்ட முத்துக்குமாரசாமி தமது சொந்த பணம் ரூ 6 லட்சத்தை வேறுவழியின்றி 'கப்பமாக' கட்டியிருக்கிறார். ஆனாலும் இந்தத் தொகை போதாது என்று தொடர்ச்சியான மிரட்டல்கள் வந்திருக்கின்றன.
இப்படியான ஒரு செல்போன் அழைப்பு வந்த அடுத்த சில நிமிடங்களில்தான் ஓடும் ரயிலில் பாய்ந்து முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் சென்னை மேலிடத்துக்கு தெரிய ஆடிப் போனவர்கள் முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினரை மிரட்டியிருக்கின்றனர்.
இத்தனைக்கும் முத்துக்குமாரதாமி தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகனுக்கு தூரத்து உறவினராம். இதையடுத்து ஞானதேசிகன் நேரில் சென்று முத்துக்குமாரசாமி குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ளார். அப்போது முத்துக்குமாரசாமிக்கு வந்த மிரட்டல்கள் குறித்து அவரது குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் முத்துக்குமாரசாமியின் உறவினர் மூலம் இந்த விவகாரம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எட்ட அவரோ வெளிப்படையாக இதில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பிருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டிய கையோடு சி.பி.ஐ. விசாரணையையும் கோரினார்.
அத்துடன் இந்த விவகாரம் திருநெல்வேலி மாவட்டத்தில் விஸ்வரூபமெடுத்தது. பல்வேறு கட்சியினரும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில்தான் அண்ணா தி.மு.க. மேலிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
விவகாரத்தை சிபிஐ எடுத்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்ற நிலையில் தான் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சிப் பதவி முதல் கட்டமாக பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அடுத்த கட்டமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்குப் பின்னரும் விவகாரம் ஓயாது போனால் சட்டப்படியான நடவடிக்கைகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்கொண்டே ஆக வேண்டும் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.