திமுகவை அழகிரி கைப்பற்றுவாரா?... இல்லை இன்னொரு "தினகரன்" ஆவாரா?
Recommended Video

சென்னை: மதுரையில் கலைஞர் திமுகவின் பொதுச் செயலாளரே என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை பார்க்கும் போது அழகிரி திமுகவை மீட்பாரா அல்லது தினகரன் போல் புதிய கட்சியை தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு நேற்றைய தினம் கட்சி ரீதியிலான மோதல் ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையே ஏற்பட்டது. கலைஞரின் உடன்பிறப்புகள் தன்னுடன் இருப்பதாக அழகிரி கூறி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவராக ஸ்டாலின்தான் பொறுப்பேற்பார் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் திமுகவினர் அனைவரும் தளபதி ஸ்டாலினின் பக்கம் தான் என்றும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கட்சி ரெடி கொடி ரெடி
இந்நிலையில் கலைஞர் திமுகவின் பொதுச் செயலாளர் அழகிரியே கட்சி ரெடி கொடியும் ரெடி பாராளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்று மதுரை முழுவதும் அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொடியில் கருணாநிதி
கருப்பு- சிகப்பு கொடியில் திமுக தலைவர் கருணாநிதியின் படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அழகிரி தனி கட்சி தொடங்கும் எண்ணத்தில் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் எப்போதும் கேட்டாலும் நான் திமுககாரன் என்கிறார். எனது ஆதங்கத்தை தலைவர் கருணாநிதியிடம் கொட்டி விட்டேன் என்று கூறியுள்ளார்.

அழகிரி போராட்டம்
எனவே திமுகவை மீட்க அழகிரி பாடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதை பார்க்கும் போது தினகரன் நினைவுதான் வருகிறது. தினகரனை முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அண்ட் கோ ஒத்தி வைத்தவுடன் தான்தான் அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் என்று கூறி அக்கட்சியை மீட்க போராடினார். இவர் போல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அத்தையின் வாரிசு தான்தான் என்றும் கட்சி தனக்கே என்றும் அதை எப்படியாயினும் மீட்பேன் என்றும் கூறியிருந்தார்.

இருவரும் வேறு கட்சி
ஆனால் அது எதுவும் நடக்காததால் தீபா, எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவை என்ற அமைப்பையும் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். அது போல் அழகிரியும் திமுகவை பெற போராடி அது முடியாவிட்டால் கலைஞர் திமுக என்ற கட்சியை தோற்றுவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்தத்தில் திமுகவில் இணைவாரா அல்லது மற்றொரு தினகரன் ஆவாரா? என்பது போக போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications