இரட்டை இலையை வாங்கின கையோடு... ஆளுக்கொன்றாக பிய்த்துக் கொள்ளப் போகிறார்களா?
இரட்டை இலை சின்னத்தை வாங்கிய கையோடு ஆளுக்கொன்றாக பிய்த்துக் கொள்ளும் நிலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கிடையே மோதல்கள் அரங்கேறி வருகின்றன.
Recommended Video
சென்னை : இரட்டை இலை சின்னத்தை வாங்கிய கையோடு, ஆளுக்கொரு இலையாக முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிய்த்துக் கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்தியுள்ளது மதுரை முப்பெரும் விழாவில் தொடங்கியுள்ள அதிருப்தி.
அதிமுகவின் இருஅணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று லேசான புகைச்சலை கிளப்பிவிட்டார் அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன். இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று அதிமுக லோக்சபா எம்பி தம்பிதுரை சொல்ல, தொண்டர்கள் நினைப்பதைத் தான் சொன்னேன் என்று பதிலுக்கு மைத்ரேயன் தங்கள் அணியின் ஆதங்கத்தை வெளிக்காட்டினார்.
மைத்தேயரனின் எதிர்ப்பு உண்மை தான் என்பது போல ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் புறக்கணிக்கப்படுவதாக ஆதரவளார்களும் நினைக்கத் தோன்றினர். இதற்கு காரணமும் இருந்தது எல்லா நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பழனிசாமியே முன்னிலைப்படுத்தப்பட்டார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சியிலும், ஆட்சியிலும் இரண்டாம் பட்ச நிலை தான் என்ற அப்பட்டமாக தெரிந்தது.
மதுசூதனன் அணி
இதற்கிடையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இவர்கள் அணிக்கு சாதகமாக வந்துவிட்டது. எனினும் இந்த வழக்கில் முக்கிய மனுதாரர் ஓ.பன்னீர்செல்வம் தான், முதல்வர் பழனிசாமி சசிகலா அணியில் இருந்து பிரிந்து வந்து சேர்ந்தவர் தான். அதனால் தான் தேர்தல் ஆணையமும் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுகவின் பெயரையும், கட்சி சின்னத்தையும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
கொண்டாடும் பழனிசாமி அணி
எனினும் கட்சியின் சின்னம் பெற்றது ஓ.பன்னீர்செல்வம் தான் என்னும் போது அவரை புறக்கணித்து முதல்வர் பழனிசாமி தரப்பு தங்களின் வெற்றியாகவே கொண்டாடி வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதன் உச்சகட்டமாகத் தான் இரட்டை இலை வெற்றியையும் கொண்டாடும் விதமாக மதுரையில் நடந்த முப்பெரும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஒதுக்கி வைக்கப்பட்டதாக வெடிக்கத் தொடங்கியுள்ளனர்.
|
ஆஸ்பர் சுவாமிநாதன் பதிவு
அதிமுகவின் ஐடி பிரிவைச் சேர்ந்த முன்னாள் செயலாளர் ஆஸ்பயர் சுவாமி நாதன் இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இரட்டை இலை மீட்பு, மாபெரும் கொண்டாட்டமாம், முப்பெரும் விழாவாம். கட்சி கொடி ஏற்றுவார்களாம் மாண்புமிகு அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஓ.பிஎஸ் திட்டமிட்டே புறக்கணிப்பா
யாருக்கும் அழைப்பும் இல்லை தகவலும் இல்லை, தலைவர்கள் உட்பட மனங்கள் உருண்டுகொண்டு தான் இருக்கும் போல என்று அவர் டுவீட்டியுள்ளார். இதே போன்று ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மதுரையில் விழா நடைபெற்ற இடம் முழுவதிலுமே முதல்வர் பழனிசாமியின் பெயரும், கட்அவுட்டுகளுமே நிறைந்திருந்ததாகவும், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும், கட்அவுட்டும் இல்லை என்று ஆதங்கப்படுகின்றனர்.
மனக்கசப்புகள்
இரட்டை இலை சின்னத்தை வாங்கிய 3 நாட்களிலேயே ஆகஸ்ட் மாதத்தில் இணைந்த இரு கைகளும் ஒன்றுக்கு ஒன்று சண்டை போட்டுக் கொண்டுள்ளது. ஆக இரண்டு இலைகளில் ஆளுக்கொரு இலையாக இருவரும் பிய்த்துக் கொண்டு செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதைத் தான் இந்த மனக் கசப்புகள் உணர்த்துகின்றனவா.
மெஜாரிட்டி இல்லை
அவ்வாறு இரண்டு அணிகளுக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டால் பெரும்பான்மை இல்லாத முதல்வர் பழனிசாமியின் அரசை எளிதில் கவிழ்த்து விடலாம். ஏனெனில் முதல்வர் பழனிசாமிக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு தான் இருக்கிறது என்று தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. எனவே மீண்டும் ஒரு தர்மயுத்தம் வெடித்தால் ஆட்சியை கலைத்து ஆளுநர் ஆட்சியை எளிதில் கொண்டு வந்துவிடலாம்.
அரசியல் நாடகம்
இதற்கான முன்னோட்டமாகத் தான் ஆளுநர் கோவையில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்தினாரா என்ற சந்தேகமும் எழுகிறது. ஆக ஒட்டுமொத்தத்தில் "பிக்பாஸ்" குடும்பத்தில் எப்படி ஸ்கிரிப்ட் போட்டு நடித்தார்களோ அப்படித் தான் தமிழக அரசியல் நாடகங்களும் அரங்கேறுகின்றன என்பது மட்டும் புலப்படுகிறது.