எடப்பாடி பழனிசாமிக்கு ‘செக்’ வைக்கும் அஸ்திரம்.. ‘கோடநாடு’.. போராட்டம் நடத்த ஓபிஎஸ் டீம் திட்டம்?
தேனி : கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கை விரைந்து நடத்தும்படி திமுக அரசை வலியுறுத்தி பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஒரு தகவலைக் கசிய விட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்த நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்த மேல்முறையீட்டு மனு வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு ஈபிஎஸ் தரப்புக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து நடத்தும்படி போராட்டத்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடநாடு கொலை வழக்கில் இறுகும் பிடி..ஆறுகுட்டியிடம் 3வது முறையாக விசாரணை - சூத்திரதாரி சிக்குவாரா?
அடுத்த திட்டம்
பொதுக்குழு வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டு வருகிறது ஓபிஎஸ் தரப்பு. இந்நிலையில், ஈபிஎஸ் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், கோடநாடு வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி போராட்டம் நடத்த ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டிருப்பது புகழேந்தியின் பேட்டி மூலம் தெரியவந்துள்ளது.
புகழேந்தி
இந்தியாவின் ஊழல்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலான நெடுஞ்சாலைத்துறை ஊழலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி என புகழேந்தி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் புகழேந்தி.
தலைமை தாங்கத் துடிக்கிறார்
அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அருகில் இருந்து செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அதிகார வெறியால் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதல் காரணமாக என்னை மட்டுமின்றி தனது தம்பி ஓ.ராஜாவையும் கட்சியில் இருந்து நீக்கினார். அவர்கள் கூறிய அத்தனை விஷயங்களையும் ஏற்றுக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக செயல்பட்டார். ஆனால் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கத் துடிக்கிறார்.
அரசியல் பச்சோந்தி
எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அதிமுகவின் மன்னனாக மகுடம் சூட முடியாது. எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரை தவறாக வழிநடத்தி செல்கின்றனர். அதிமுக கட்சி, மற்றும் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது என்றால் அதற்கு காரணம் அரசியல் பச்சோந்தி கே.பி.முனுசாமி தான். கே.பி.முனுசாமி ஒரு எட்டப்பன். பழனிசாமி கூடவே இருந்து அவரை காலி செய்யும் பணியை செய்து வருகிறார்.
ஈபிஎஸ் சிறை செல்வது உறுதி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ததுதான் இப்போதைய அரசியல் மாற்றத்திற்கு காரணம். அவர் இதை பலமுறை என்னிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி. அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள். அதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நடைபெற்றுள்ளது.
கட்சி எப்படி போனாலும் பரவாயில்லை
தேர்தலின் போது அவசர அவசரமாக 10.5% இட ஒதுக்கீட்டை தற்காலிகம் என்று கூறி தென்மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டதால் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் எடப்பாடி பழனிசாமி தான். இரட்டை இலை முடங்கினாலும் கட்சியே போனாலும் பரவாயில்லை என்று எடப்பாடி பழனிசாமி வரும் தேர்தலை சந்திக்க திட்டம் தீட்டி உள்ளார்.
துரோகத்தின் உச்சம்
ஓ.பன்னீர்செல்வம் நிறம்மாறாத பூ போன்றவர். எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை மீட்டெடுத்து வழி நடத்துவார். துரோகத்தின் உச்சமான எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பவர்கள், எடப்பாடிக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தொடர்பாக செய்தித்தாள்களில் கசிந்த தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி, "துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி தான். அவர் மற்றும் சில உயர் அதிகாரிகள் இதில் கைது செய்யப்பட வேண்டும். இதேபோன்று கொடநாடு வழக்கு, ஊழல் வழக்கு அனைத்து விஷயமும் கசியத்தான் செய்யும்.
போராட்டம் நடத்துவோம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணைய அறிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மீது ஜெயக்குமார் குற்றம் சாட்டுவது கண்டணத்துக்குரியது. கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தும்படி திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பெரிய போராட்டத்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.