ஓபிஎஸ்சின் சொந்த ஊரில் வெடித்த சர்ச்சை.. கல்வெட்டில் முதல்வர் எடப்பாடியின் பெயர் புறக்கணிப்பு
தேனி: துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் திட்ட மதிப்பீட்டு கல்வெட்டில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர்கோபுர மின்விளக்குகள் கடந்தாண்டு அமைக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென கல்வெட்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இக்கல்வெட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதி முன்னாள் எம்பி பார்த்திபன் ஆகியோர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கல்வெட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் இல்லாததால், அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஏகப்பட்ட தளர்வு அறிவித்த முதல்வர்.. லாக்டவுனை நீடித்தது ஏன்? மக்களுக்கு வைத்த கோரிக்கை
போஸ்டர் சர்ச்சை
முன்னதாக தேனி மாவட்டத்தில் ஏற்கனவே, ‘முதல்வர் ஓபிஎஸ்' என போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. அதிமுகவில் இருக்கும் கோஷ்டி பூசலை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது.
ஓய்ந்த சர்ச்சை
அப்போது 10க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பக்கூடாது என்று ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டனர்.
ஒபிஎஸ் பேச்சு
இதனிடையே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெரியகுளத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், ‘நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்' என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த சூழலில் தான் தற்போது கல்வெட்டில் முதல்வர் பெயர் இல்லாதது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அதிமுக எப்படி
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் சலசலப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்பி அன்வர் ராஜா ஆகியோர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பின. தேர்தல் நெருங்கிய பின்னர் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை முடிவு செய்து தேர்தலை அதிமுக சந்திக்குமா அல்லது சந்தித்த பின்முதல்வர் வேட்பாளர் குறித்து தீர்மானிக்குமா என்பது தேர்தல் நேரத்தில் தெரிந்துவிடும்.