காலேஜ் பீஸ் கட்டுவதில் சிரமம்..தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி..நெல்லையில் சோகம்
திருநெல்வேலி: படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. சில தற்கொலை முயற்சி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
மாணவ, மாணவிகள் மன உறுதியோடு எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்று அரசும், அமைச்சர்களும் ஆசியர்களும் தெரிவித்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
நெல்லை அருகே கல்லூரி மாணவி ஒருவர் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். உயிரிழந்த அந்த மாணவியின் பெயர் பாப்பா என்பதாகும். 18 வயதான பாப்பா
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவ முத்துக்குமார் என்பவரின் மகளாவார். முத்துக்குமார் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
பாப்பா நன்றாக படிப்பவர் பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ 12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவனைகளாக செலுத்தினார். அவர் கூலி தொழிலாளி என்பதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்துள்ளார்.
இருந்த போதிலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது. தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்கள் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி மாணவி பாப்பா மன வேதனை அடைந்தார். நேற்றைய தினம் மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பாப்பா கதவை உள்புறமாக பூட்டி விட்டு துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும் அவரது மனைவியும் கதவை குச்சியால் திறந்து உள்ளே சென்று பார்த்த போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பாப்பாவின் கைப்பையை சோதனையிட்ட போது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதில், அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நெல்லை மாவடடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.