14 பேர் கொண்ட பணிக்குழு எதுக்கு? ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியா? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!
திருநெல்வேலி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் அங்கு பாஜக 14 பேர் அடங்கிய பணிக்குழுவை அமைத்துள்ளது. இதனால் அங்கு பாஜக தனித்து போட்டியிடலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் 14 பேர் அடங்கிய பணிக்குழு அமைத்தது ஏன்? என்பது பற்றி அக்கட்சியின் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அந்த பணிக்குழு பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். இந்நிலையில் தான் ஈரோடு சட்டசபை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 31ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.
சாயும் இலைகள்.. சமரசம் செய்யும் தலைகள்! அடிச்சு சொல்லும் அண்ணாமலை - நயினார் தெரிவித்த அதே மேட்டர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி முயற்சித்து வருகிறது. அதேபோல் ஆளும் அரசுக்கு எதிராக எதிர்ப்பலை இருப்பதாக கூறும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மறுபுறம் அதிமுக சார்பில் கூட்டணி தர்மத்தில் அடிப்படையில் தமாகாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதிமுக உட்கட்சி பிரச்சனை, இரட்டை இலை சின்னம் பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சேர்ந்து செயல்பட வேண்டிய சூழல் உள்ளதால் இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா மீண்டும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
பாஜக தனித்து போட்டி?
இதற்கிடையே தான் பாஜக தனித்து போட்டியிடலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் நேற்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 14 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில் மீண்டும் இந்த இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் கூட சமீபத்திய காலமாக அதிமுக, பாஜக இடையே நீடிக்கும் வார்த்தை போரால் இது சாத்தியமாகலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நயினார் நாகேந்திரன் பேட்டி
இந்நிலையில் தான் திருநெல்வேலியில் பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பாஜக அமைக்கப்பட்ட பணிக்குழு குறித்தும், அந்த தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
பாஜக தலைமை முடிவெடுக்கும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக, பாஜக கட்சி தலைமைகள் முடிவெடுக்கும். இதில் கூட்டணி கட்சிகள் தான் முடிவெடுக்கும். தொகுதியில் யார் நிற்கிறார்கள் என்பது முக்கியமில்லை. தேர்தலில் வேலை செய்ய வேண்டும். தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக 14 பேர் கொண்ட குழுவை பாஜக நியமனம் செய்துள்ளது. இதனை பாஜகவின் மாநில தலைவர் அறிவித்துள்ளார். இது வேலைக்கான பணிக்குழு தான் '' என்றார்.
பாஜக இணைந்து செயல்படும்
இதையடுத்து, ‛‛அதிமுக, பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு உள்ளது. தேர்தல் நேரத்தில் சேர்ந்து செயல்படுவீர்களா?'' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‛‛நமது கையில் உள்ள விரல்களும் ஒன்றாக இல்லை. அதேபோல் கருத்து வேறுபாடுகள், மாற்று கருத்துகள் வர வேண்டும். ஆனால் தேர்தல் சமயத்தில் ஒருமித்து பணியாற்ற வேண்டும். தேர்தலில் யார் போட்டியிட்டாலும் பாஜக இணைந்து செயல்படும்'' என்றார்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு..
இதையடுத்து, ‛‛ஆளுநர் சட்டவிரோதமாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது'' என கேள்வி எழுப்பப்டட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன், ‛‛காங்கிரஸ் கட்சியில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியவில்லை. ஆளுநரை பொறுத்தமட்டில் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு அவரது நடைமுறையை ஒழுங்காக கடைப்பிடித்து வருகிறார். அதனால் எந்த கோளாறும் இல்லை'' என்றார்.