ஸ்டாலின் ஐயா.. உதவுங்க! சிதைந்த சிறுவன் முகம் - உள்ளே விடாத பள்ளி! சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு
திருவாரூர்: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் சக குழந்தைகளோடு பேசி பழகி விளையாட முடியவில்லை என்றும், பள்ளியிலும் சேர்க்க அனுமதி மறுப்பதாகவும், தனது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள உதடு அண்ணப்பிளவால் நோய்க்கு சிகிச்சையளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என கூலித் தொழிலாளி கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதி முதலில் 2 பெண் குழந்தைகள் பிறந்து உள்ளன. அடுத்து ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என பெற்றோர் விரும்பியபடியே ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
5 ஆண்டுகளுக்கு முன் பிறந்த அந்த குழந்தையின் பெயர் சக்திவேல். ஆனால், தவம் கிடந்து ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தாய், தந்தையால் முழுமையாக மகிழ்ச்சியடைய முடியாமல் போனது. காரணம் அந்த குழந்தையின் தோற்றம். பிறவியிலேயே சக்திவேலுக்கு உதடு அண்ணப்பிளவு குறைபாடு இருந்து இருக்கிறது.
ஹீராபென் மறைவு: தாயாரை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது -பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் ஆறுதல்!
உதடு அண்ணப்பிளவு
இதனால் வழக்கமான முகம், வாயின் தோற்றம் அந்த குழந்தைக்கு இல்லை. இதனால் சிறுவன் முறையாக உண்ணவும், பேசவும் முடியாமல் தவித்து வருகிறான். அதுமட்டுமின்றி இந்த தோற்றத்தின் காரணமாக குழந்தையை பலரும் ஒதுக்கியும் தனிமைப்படுத்தியும் வருவதாக வேதனைப்படுகிறார்கள் சக்திவேலின் பெற்றோர்கள்.
விளையாட முடியவில்லை
குறிப்பாக அந்த பகுதியில் மற்ற குழந்தைகளோடு பேசி பழகி விளையாட முடியாமல் சக்திவேல் தவித்து வந்து இருக்கிறார். சரி பள்ளிக்கு அனுப்பினாலாவது சக்திவேல் நல்ல விசயங்களை தெரிந்துகொள்வார் என்ற எண்ணத்தில் அவரை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க அவரது பெற்றோர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
பள்ளியில் சேர்க்க மறுப்பு
ஆனால் அங்கும் அவர்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமுமே பதிலாக கிடைத்தது. சக்திவேலின் முகச்சிதைவு நோய் காரணமாக வித்தியாசமாக இருக்கும் அவரது தோற்றத்தை காரணமாக கூறி பள்ளியில் சேர்க்க நிர்வாகம் மறுத்ததாக பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். இப்படி எங்கு சென்றாலும் புறக்கணிப்புகளும், சோகங்களுமே அவர்களுக்கு தொடர்கதையாக உள்ளது.
சிகிச்சை உள்ளது; பணம் இல்லை
இதனால் தங்களுடைய குழந்தையின் நிலை கண்டு மனம் புழுங்கி அவர்கள் கடுமையான மன உளைச்சலில் தவித்து வருகின்றனர். தன்னுடைய குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறி இருக்கிறார்கள். ஆனால், கூலிதொழிலாளியான சங்கரிடம் அவ்வளவு பணம் இல்லை.
முதலமைச்சரிடம் கோரிக்கை
தன்னுடைய குழந்தைக்கு மருத்துவ செலவு செய்ய வழியின்றி தினமும் அதன் முகத்தை பார்த்து அழுத வண்ணம் இருக்கிறார். குழந்தை சக்திவேலின் பெற்றோர்கள் வறிய நிலையினை கருத்தில்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சக்திவேலின் உதடு அண்ணப்பிளவு மருத்துவ அறுவை சிகிச்சைக்கான நிதி உதவியினை அளிக்க முன்வர வேண்டும் என அவரது பெற்றோர்கள் மற்றும் பரவாக்கோட்டை கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆவடி தான்யா
கடந்த செப்டம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த தான்யா என்ற 9 வயது சிறுமிக்கு இதேபோல் முகத்தின் ஒருபக்கம் சிதைவடைந்தது. இதற்கான சிகிச்சைக்கு பொருளாதாரம் இன்றி தவித்த சிறுமி, "முதலமைச்சர் ஐயா, எனக்கு கன்னம் இப்படி இருக்குறதால யாருமே பேசமாட்றாங்க. எனக்கு நீங்க சரி பண்ணி தாங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. தொலைக்காட்சி வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார்".
உதவிய முதலமைச்சர்
இதனை அடுத்து முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உதவினார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று தற்போது நலமோடு உள்ளார். இதேபோல், திருவாரூர் சிறுவன் சக்திவேலுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.