விடாத மழை பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு.. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
வேலூர்: தமிழக - ஆந்திர எல்லையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றின் கரையோர மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் அம்மாநில நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் நீரினால் வேலூர் மாவட்டம் பாலாற்றில் தற்போது 4 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து உள்ளது.

பாலாற்றின் துணை ஆறுகளான மண்ணாற்றில் இருந்து 280 கன அடி, கல்லாற்றில் இருந்து 40 கன அடியும், மலட்டாற்றில் இருந்து 1,600 கன அடியும், பள்ளிகொண்டா அகரம் ஆற்றில் இருந்து 25 கன அடியும் பாலாற்றுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல், வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகள் மூலம் பாலாற்றுக்கு 20 கன அடியும், பள்ளிகொண்டா ஏரி நிரம்பியுள்ளதால் அதிலிருந்து பேயாறு வழியாக பாலாற்றுக்கு 10 கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது. இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுகளில் பாலாற்றில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பாலாற்றின் இரு கரையோர மக்கள் எவரும் பாலாற்றில் இறங்கி குளிப்பது, ஆற்றில் துணிகளை துவைப்பது, விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை ஆற்றின் அருகே விளையாட அனுமதிப்பது, குறுக்குச்சாலையாக ஆற்றை கடப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என வேலூர் மாவட்டம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் உள்ள தரைப்பாலம் 3 வது முறையாக முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது.இதனால் ஆம்பூரில் இருந்து அழிஞ்சிகுப்பம், மேல்வழித்துணையாங்குப்பம், மேல்பட்டி, கீழ்பட்டி வளத்தூர் செம்பேடு நரியம்பட்டு, சங்கராபுரம், கடாம்பூர் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், இதேபோல் அப்பகுதியில் இருந்து ஆம்பூருக்கு வரக்கூடிய பொது மக்களின பாதுகாப்பு கருதி பாலத்தை கடக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications