அடுத்தடுத்து.. பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் 5 விண்கற்கள்.. ஒவ்வொன்றும் வஞ்சனை இல்லாத சைஸ்!
பூமிக்கு மிகவும் அருகாமையில் ஐந்து ராட்சத அளவிலான விண்கற்கள் வந்து செல்ல இருப்பதை நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
வாஷிங்டன்: பூமிக்கு மிகவும் அருகாமையில் ஐந்து ராட்சத அளவிலான விண்கற்கள் வந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நமது பால்வெளியில் கோள்கள் மட்டுமின்றி பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில அவ்வப்போது பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகில் வருவது உண்டு. சத்தமில்லாமல் சில விண்கற்கள் நம்மைக் கடந்து விடுவதுண்டு. சில விண்கற்களோ புவி ஈர்ப்பு விசை காரணமாக நம் வளிமண்டலத்திற்குள் நுழைந்து உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன.
எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படும் இத்தகைய விண்கற்கள், சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. ஆனால் சில அபாயகரமானவை பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியாத பள்ளங்களையும், சேதங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.
திருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை
தீவிர கண்காணிப்பு
இதனாலேயே பூமிக்கு அருகில் அல்லது அதனைக் கடந்து செல்லும் விண்கற்களை எப்போதும் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அறிவியலின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் பூமிக்கு அருகில் வரும் விண்கற்களைக்கூட விஞ்ஞானிகள் தற்போது எளிதாக கண்டுபிடித்து விடுகின்றனர்.
ராட்சத விண்கற்கள்
அந்தவகையில் இன்று தொடங்கி வரும் புதன்கிழமை வரை பூமிக்கு மிக அருகாமையில் கடந்து செல்ல உள்ள ஐந்து ராட்சத அளவிலான விண்கற்களைப் பற்றிய தகவல்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. இவற்றின் அளவானது மிகப்பெரிய மாடிக் கட்டிடம் முதல் விமானம் போன்ற அளவிலானது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தில்லை
இந்த விண்கற்களானது பூமியை சுமார் 4.6 மில்லியன் மைல் தூரத்தில் கடந்து செல்ல உள்ளன. அதாவது 7.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்லும் இந்த விண்கற்களால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவை விட தூரம்
பார்ப்பதற்கு மிகவும் அருகில் என்பது போல் இருந்தாலும், இவை பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தைப் போல் 19.5 மடங்கு அதிகமான தொலைவிலேயே பூமியைக் கடந்து செல்கின்றன. புரியும்படிச் சொல்வதென்றால், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான சராசரி தொலைவு 2,39,000 மைல்கள் ஆகும். அதாவது 3,85,000 கிலோ மீட்டர்கள். இதை வைத்து அந்த ஐந்து விண்கற்கள் எவ்வளவு தொலைவில் பூமிக்கு அருகில் வருகின்றன என்பதை நாம் எளிமையாக புரிந்து கொள்ள இயலும்.
மிகப் பெரியது
நாசா தெரிவித்துள்ள இந்த ஐந்து விண்கற்களிலேயே மிகவும் பெரிதானதாகக் கருதப்படும் சுமார் 310 அடியுள்ள விண்கல் (2013 X A 22) இன்று (ஜூன் 8) பூமிக்கு அருகில் வருகிறது. இது பூமிக்கு அருகில் வரும் தொலைவு 18,20,000 மைல் ஆகும். இதேபோல், 64 அடி கொண்ட மற்றொரு விண்கல் (2020 KZ 3)-ம் இன்று பூமிக்கு அருகில் 7,61,000 மைல்கள் தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.
மூன்றாவது விண்கல்
இந்த இரண்டு விண்கற்களைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை, அதாவது ஜூன் 10ம் தேதி 65 அடியுள்ள மற்றொரு விண்கல் (2020 KY) பூமியை மிக அருகாமையில் கடந்து செல்கிறது. இது 41,20,000 மைல் தொலைவில் பூமிக்கு அருகாமையில் வருகிறது. 78 அடி அகலமுள்ள மற்றொரு விண்கல் (2020 JQ2), அதற்கு அடுத்தநாள் அதாவது ஜூன் 11ம் தேதி பூமிக்கு அருகில் 30,30,000 மைல்கள் தூரத்தில் கடந்து செல்கிறது.
தொடர் கண்காணிப்பு
இந்த நான்கு விண்கற்கள் மட்டுமின்றி, வரும் வியாழனன்று 60 அடி அகலமுள்ள மற்றொரு விண்கல் (2020 JS1)-ம் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது. இது 23,50,000 மைல் தொலைவில் பூமிக்கு அருகில் வருகிறது. இந்த ஐந்து விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை என்ற போதும், இவற்றை விஞ்ஞானிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
ஸ்டேடியம் அளவு
முன்னதாக கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று இதே போல் மிகப்பெரிய ஸ்டேடியம் அளவிலான மூன்று ராட்சத விண்கற்கள் பூமியைக் கடந்து சென்றது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தொலைவைப் போல் 13 மடங்கு தொலைவில் அவை கடந்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.