பின்னலின் தத்துவம் தெரியுமா... தலைமுடியை விரித்து போட்டால் வீட்டில் என்ன கஷ்டம் வரும் தெரியுமா?
பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி
சென்னை: தலைமுடியின் நுனி வழியாக ஆத்மசக்தி வெளியேறுகிறது. நல்ல, தீய உணர்வுகள் அல்லது அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் போன்றது முடியின் நுனி. எனவேதான் தலைமுடியை விரித்துப்போட வேண்டாம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். நாம் செய்யும் சிறிய தவறின் மூலம் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்காமல் போகிறது. அது என்ன தவறு என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். பார்த்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழலில் பலரும் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றனர்.
தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும் தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள். ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல. வாழ்வின் தத்துவம்.
தலையை பின்னாமல் விடக்கூடாது
இந்த நவநாகரீக உலகத்தில் லூஸ் ஹேர் என்று சொல்லப்படும் தலைவிரி கோலமானது பெண்களுக்கு நாகரீகம் ஆகிவிட்டது. நம் முன்னோர்கள் இதை அமங்கலமாக கூறுவார்கள். இதனால் பெண்கள் முடிந்தவரை தங்களது தலை முடியை வாரி கட்டிக்கொள்வது நல்லது. தலைமுடியை வீட்டினுள் காற்றில் அலைய விடக்கூடாது. அது மிகப்பெரிய கஷ்டத்தை நம் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்து விடும்.
தலைவிரி கோலத்தை தவிர்ப்போம்
வீட்டிற்குள் முடி உதிரக்கூடாது. இப்படிப்பட்ட நல்ல பழக்கங்களை நம் வீட்டில் இருக்கும் இளைய தலைமுறை பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது நம்முடைய கடமையாகும். தலைவிரி கோலத்தை தவிர்ப்போம். இது உறவின் மீதான பிடிப்பை அறுக்கக்கூடியது. பின்னல் இதன் அமைப்பு திரிவேணி சங்கமத்தை ஒத்தது. 3 நதிகள் சேரும் போது இரண்டு நதிகள் கண்களுக்கு புலப்படும். ஒரு நதி கண்களுக்கு புலப்படுவதில்லை. இதுபோலவே பின்னலின் 3 பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.
நல்ல சக்தி
தலைமுடியின் நுனி வழியாக ஆத்மசக்தி வெளியேறுகிறது. நல்ல, தீய உணர்வுகள் அல்லது அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் போன்றது முடியின் நுனி. அப்படியானால் மொட்டை அடித்துக் கொள்கிறார்களே அவர்களை என்ன சொல்வது என்ற கேள்வி எழும் உங்களுக்குள். வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை என்பதை உணர்த்துவற்காகத்தான்.
சீப்பில் தலைமுடி
இதே போல பலரும் தலையை சீவி விட்டு அதில் உள்ள முடியை கூட நீக்காமல் அப்படியே வைத்து விடுவார்கள். இது நம் வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது சாஸ்திரம். நம் தலையை சீர்படுத்தும் சீப்பிலும் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள். இதனால் இந்த சீப்பை தலையை சீவிய உடனேயே சுத்தம் செய்துவிடவேண்டும். சீப்பை அழுக்காக வைப்பதும் ஆகாது என்கின்றனர் பெரியவர்கள்.
மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்
மாதத்திற்கு ஒரு முறை உங்களது சீப்பை கழுவி சுத்தம் செய்துவிடுங்கள். இதேபோல் பற்கள் நீங்கிய சீப்பையும், அதிகமாக தேய்ந்த சீப்பையும் உபயோகப்படுத்தக் கூடாது. இப்படிப்பட்ட சீப்பை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு புதிய சீப்பை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நம் வீட்டிற்குள் என்றும் நிறைந்திருக்கும்.