கார்த்திகை மாதம் பிறந்தது...மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்பன், முருக பக்தர்கள்
மதுரை: கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் எங்கும் எதிரொலித்தது.
கார்த்திகை மாதம் பிறந்தாலே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து பய பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க இருமுடியை தலையில் சுமந்து செல்பவர்கள். இன்று கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஆறுகள், அருவிகளில் நீராடிவிட்டு பல்வேறு கோவில்களில் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.

குருசாமி தலைமையில் விரதம்
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயம், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் முதலான ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து மாலையணிந்து கொண்டார்கள். மேலும், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில், மதுரையில் உள்ள ஐயப்பன் ஆலயம் மற்றும் பல கோயில்களிலும் மாலையணிந்து கொண்டு விரதத்தைத் துவக்கினார்கள் பக்தர்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தரும் மாலை அணிந்து கொண்டனர். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர்.

மண்டல பூஜை தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜைக்காகவும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். திருப்பூர், கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் ஏராளமான பக்தர்கள் கருப்பு, நீல நிற ஆடைகளை வாங்குவதற்கு குவிந்திருந்தனர். மேலும் தாங்கள் அணிவிக்கும் மாலைகளையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

துளசிமணி மாலைகள்
ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. சந்தன மாலை, ரத்த சந்தனமாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலை என 12 வகையான மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் ஐயப்ப சாமி டாலர்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

ஐயப்பன் கோவில் நடை திறப்பு
இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் 18ஆம் படி வழியாக அனுமதிக்கப்பட்டனர். புதிய மேல் சாந்திகள் பதவியேற்பு நடைபெற்றது. இன்றைய தினம் முதல் வழக்கமான பூஜைகள் தொடங்கின. அடுத்த மாதம் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 13ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முருக பக்தர்கள்
கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். இன்று அதிகாலையிலேயே முருக பக்தர்கள் பலரும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் எங்கும் எதிரொலித்தது.












Click it and Unblock the Notifications