புரட்டாசி சனி விரதம்: சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்..ஏழுமலையானை வழிபட்டால் என்னென்ன நன்மைகள்
சென்னை: கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிப்பட்டால் சனி பகவானின் பிடியிருந்து விடுபட்டு, காரியத்தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையல் இட்டு பெருமாளை வழிபடுகின்றனர்.
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருமலையில் பெருமாளின் அவதாரம் நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. நாளை புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பிறக்க உள்ள நிலையில் விரதம் இருந்து பெருமாளை வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கர்ம பலன்களை அழிக்கும் சனிபகவான் கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமையில் பிறந்தார். சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாளாக ஆனது. இது பற்றிய புராண கதை ஒன்றை பார்க்கலாம்.

புரட்டாசி சனிக்கிழமை விரதம்
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்தால் பெருமாளுக்கு மகிழ்ச்சியை தருவதோடு, சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். சனியின் பார்வையும் பலவீனமடையும். சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோகம் கூடிவரும்.

சனிபகவான்
சனிபகவான் கலியுகத்தில் முதல் முதலாக வரும் போது, நாரத முனிவர் சனிபகவானிடம், பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம். ஆனால், திருமலை பக்கம்
சென்று விடாதீர்கள் என்று அவரை தூண்டி விடுவது போல கூறினார். அதைக் கேட்ட சனி பகவான், என்னை யார் என்ன செய்ய முடியும் என்று திருமலையில் மேல் தன் காலை வைத்தார்.

திருவேங்கடமுடையான்
சனிபகவான் கால் வைத்ததும் அடுத்த நொடி பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார். திருமலையில் யார் இருக்கிறார் என தெரிந்தும் மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் சனிபகவானே துன்பப்பட்டு நடு நடுங்கி தன்னையும் படைத்து வழிநடத்தும் மகாவிஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதை கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டார்.

மன்னிப்பு கேட்ட சனிபகவான்
அதற்கு ஏழுமலையான், என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பப்படுத்த மாட்டேன் என்று கூறினார்.

சனிக்கிழமை விரதம்
பிறகு சனிபகவான் பெருமாளிடம், மகாபிரபு! எனக்கு ஒரு வரம் தரவேண்டும் என்று கேட்டார். நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை அதனால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும் என்ற வரத்தை கேட்டார். பெருமாளும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்று கொண்டார். அதனால் தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது.

புனர்ப்பு தோஷம் நீங்கும்
ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்ட சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், புனர்ப்பு தோஷத்தினால் திருமண தடை ஏற்பட்டுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளுக்கு படையல் போட்டு வழிபடலாம். திருமணம் நடைபெறுவதில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.












Click it and Unblock the Notifications