சூரிய கிரகணம்..திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சிறப்பு பூஜை..தரிசித்தால் தோஷம் நீங்குமாம்!
திருநள்ளாறு:
சூரிய கிரகணத்தை ஒட்டி பல்வேறு கோயில்களின் நடை அடைக்கப்பட்டு பூஜைகள் நிறுத்தப்படும். கிரகணம் முடிந்த பின்னர் பரிகார பூஜைகளுக்குப் பின்னரே சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதே நேரத்தில் சூரிய கிரகண நேரத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இன்றைய தினம் சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன.
சூரிய கிரகணம் நிகழும் இந்த நாளில் நாம் பிறருக்கு செய்யும் தான தர்மங்களினால் நூறு மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தை ஒட்டி பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்படும் நிலையில் சனீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. உலகிலேயே சனி பகவானுக்கு என தனி சன்னதி, திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் மட்டுமே உள்ளது.

தர்ப்பை புல் மரம்
கிரகணம் நிகழும் போது வீடுகளில் தர்ப்பை புல்லை பயன்படுத்துவார்கள். தர்ப்பை மகிமை வாய்ந்தது. திருநள்ளாறு ஸ்தல இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர். அங்கு தல விருட்சமே தர்ப்பை புல்தான் எனவே கிரகண தோஷங்கள், எதிர்மறை சக்திகள் எதுவும் தாக்காது என்பதால்தான் இந்த கோவில் நடை அடைக்கப்படுவதில்லை.

சூரியன் சனி
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். சனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் பயம்தான். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள்.

சனிபகவான்
ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம். சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார்.

சனி தசை
சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார். சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும். சனி திசை 19 வருடங்களாகும். ஒருவரின் ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது 19 ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் ஒருவரை வைத்திருப்பார்.

ஈஸ்வர பட்டம்
சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே.

தோஷங்கள் நீக்கும் சனிபகவான்
ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. எனவேதான் சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை தரிசித்து தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் சூரிய கிரகண நாளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த நாளில் சனிபகவானை தரிசனம் செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications