Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்

Subscribe to Oneindia Tamil

ஒரு ஊர்ல ஒரு புருசன், பெண்டாட்டி இருந்தாங்க.

அவங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க இருந்தாங்க. அவங்க நாலு பசு மாடு வளத்தாங்க.

காலையில எந்திரிச்சதும் புருசன் சாணி சகதி அள்ளி, பசுமாடுகள குளுப்பாட்டி, பருத்தி விதைய ஆட்டி புண்ணாக்கும் தவிடும் கலந்து வச்சி தண்ணிக்கு விடுவான்.

பெண்டாட்டி அடுப்பு வேலய முடிச்சி, மோரு கடைஞ்சி வீட்டெ சுத்தம் பண்ணி முடிச்சி, மாடுகளுக்கு புல் கொண்டாரப் போவா. பிறகு, எல்லாரும் ஒன்னாஉக்காந்து சாப்புடுவாங்க. அதுக்குப் பிறகு மாடு மேய்க்கப் போவாங்க.

மாடுக அதுபாட்டுக்கு மேயும். இவங்க ஆத்துல குளிச்சிட்டு, துணிகளைத் துவைச்சி காயவச்சிட்டு, ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழின்னு விளையாடுவாங்க.

மத்தியானத்துக்கு, கலயத்துல வெண்ணெய் மோரோட கம்பங்கஞ்சி ஊறிக் கிடக்கும். சிரட்டையில காட்டுக்கீரை, முருங்கக்கீரை, பச்சமிளகா, உள்ளி(வெங்காயம்) போட்டு வதக்கின வெஞ்சம் இருக்கும்.

இதக் குடிச்சிட்டு, பொழுதூர வீட்டுக்கு வருவாக. வந்து பழையபடிக்கு பால்கறந்து காய்ச்சி குடிச்சிட்டு, சூடம் காமிச்சி மாடுகள கும்புட்டு படுத்திருவாங்க.இப்பிடி அவங்க பொழுது போகும்.

அப்ப ஒரு நா,

பார்வதியும், பரமசிவனும் உலகம் சுத்திப் பாக்க ஊருக்குள்ள வந்தாங்க.

இவங்க இருக்கிற இடத்துக்கு வந்ததும், குமரிச்சமும், சிரிப்புச் சத்தமும் ஒரே கலகலப்பா இருக்கு.

இது யாரு, இம்புட்டு சந்தோசமா இருக்கதுன்னு எட்டிப்பாத்தாங்க.அந்தப் புருசனும், பெண்டாட்டியும் புள்ளைங்களோட ஆனந்தமா இருக்காங்க.

அதப் பாத்த பார்வதிக்கு, இவங்களோட நாமளும் தங்கியிருக்கனும்ன்னு ஆசை வந்துட்டது!

இத தெரிஞ்சிக்கிட்ட பரமசிவன், பிரியம் போல இருந்துட்டுவான்னு மறைஞ்சிட்டாரு.

பார்வதி அப்பவே ஒரு குடுகுடு கிழவியா மாறி ஒரு கம்பெ ஊனிக்கிட்டு தட்டுத்தடுமாறி இவுக வீட்டுக்குள்ள வந்தா. கழுத்துல தல நிக்காமகிடுகிடுன்னு ஆடுது.

இந்தக் கிழவியப் பாக்கவும் புருசனும் பெண்டாட்டியும் பதறிப்போயி ஓடிவந்து கையப் பிடிச்சி என்னம்மி யாரம்மி நீங்க. எங்கருந்து வாரீங்கன்னு கேட்டுவீட்டுக்குள்ள அழைச்சிட்டுப் போனாங்க. கட்டில்ல உக்கார வச்சாங்க.

(அம்மி:அம்மாவுக்கு அம்மா. பாட்டி. பெருமூதாட்டிக்கான மரியாதைச் சொல் அம்மி)

அவங்க கொண்டாடுன பிரியத்தையும், பாசத்தையும் பார்த்த பார்வதிக்கு கண்கலங்கிட்டது.

எம் பேர்ல இப்பிடி அன்பு செலுத்த யாருமில்ல. நா ஒரு அனாதி. ஒத்தீல கஞ்சி காய்ச்சி குடிச்சிக்கிட்டிருந்தேம். தாள முடியல. மனசு வெம்பிப் போயி இப்படியேவந்தேம்ன்னா.

அவ நாடியத் தாங்கி கண்ணத் தொடச்சி, கலங்காத அம்மி; நாங்க இருக்கொம் ஒனக்கு. எங்களுக்கும் ஒரு பெரிய மனுசி வீட்டுக்குள்ள இருந்தா தாவல. எங்ககூடவே இருந்துருன்னு சொல்லி வச்சிக்கிட்டாக.

வீட்டுக்காரி மண் பாத்திரத்துல மோர் கொண்டாந்து தர அத வாங்கி பார்வதி அம்மி குடிச்சா.

ஆயுசுல இப்பிடி ஒரு மோர் குடிச்சதில்ல. துரு துருன்னு மோர்ல சிறு நெல்லிக்கா தண்டி வெண்ணெய் உருண்டை உருண்டையா மிதக்கு. குடிக்க குடிக்க இன்னும் இம்புட்டுகுடிப்பமான்னு அம்புட்டு ருசியா இருக்கு.

ராத்திரிக்கு, சுண்ட ரத்தங்கெணக்க பாலைக் காய்ச்சி, அப்பிடி ஒரு பாலு கொண்டாந்து கொடுத்தாங்க.

வயிறும் மனசும் குளுந்து போச்சி பார்வதி அம்மிக்கு.

எட்டோட எட்டு நாளா அவங்க வீட்டுல பார்வதி இருக்கா. அவங்களும் அம்புட்டு சந்தோசமா வச்சிக்கிட்டாங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+