சிறுகதைப் போட்டி: 20 கதைகளுக்கு தலா ரூ. 1,500 பரிசு
'மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்கள் அதிகாரத்தின் உரையாடலால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். அதிகாரம் சதா அவர்களை முறைமைப்படுத்திக் கொண்டே இருக்கிறது...' என்றார் மிஷேல் ஃபூக்கோ. அதிகாரத்தின் உரையாடலை தகர்க்க வேண்டுமானால் அதற்கு மாற்றான உரையாடலை முன்வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியான மாற்று உரையாடலுக்கான ஒரு களமாக 'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' என்ற மையமற்ற தொகுப்பை தொடங்கியிருக்கிறோம்.
இதற்கு தலைவர், செயலர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் என்றெல்லாம் யாரும் கிடையாது. இதுவொரு அரசு சாரா, தனிநபர் சாரா ஓர் அமைப்பு. இதில் நீங்களும் நாங்களும் நாமும் அடக்கம். பதிவுலக நண்பர்களுக்காக ஒரு மாற்று நூலகம், இலவச ஃபிலிம் சொஸைட்டி, சிறுகதைப் பட்டறை, கவிதைப் பட்டறை, சிறுகதைகளுக்கு என்றே ஒரு தனி வலைத்தளம்... என பயணம் தொடரும்.
தொடரலாம்.
தொடருமா?
முதல்படியாக,
1. உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி.
2. முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, ஆறுதல் பரிசுகள் என்றெல்லாம் எதுவும் கிடையாது.
3. மொத்தம் 20 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்படும். கதை ஒன்றுக்கு ரூபாய் 1,500 வீதம், 20 சிறுகதைகளுக்கும் சரிசமமாக பரிசுத்தொகை அனுப்பப்படும்.
4. வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்தது 3 பதிவுகளை எழுதிய வலைப்பதிவாளர்களாக இருக்கவேண்டும்.
5. ஒருவர் ஒரு சிறுகதையை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒருவரே இரண்டு அல்லது மூன்று வலைத்தளங்களை வைத்திருந்தால், வலைத்தளத்துக்கு ஒன்று வீதம் கதைகளை அனுப்பலாம்.
6. சிறுகதையானது ஆயிரம் வார்த்தைகளை தாண்டக் கூடாது. இதற்கு முன் எழுதியதாகவோ, மீள் பிரசுரம் செய்ததாகவோ, அச்சில் வந்ததாகவோ, இன்னொருவரின் படைப்பை அடிப்படையாகக் கொண்டதாகவோ இருக்கக் கூடாது.
7. போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் வேறு இதழ்களுக்கு, போட்டிக்காக அனுப்பிய சிறுகதையை அனுப்பக் கூடாது.
8. இந்திய நேரப்படி, 16.05.2009 அதிகாலை 1 மணி முதல், ஜூன் 30ம் தேதி இரவு 12 மணி வரை எழுதப்பட்ட சிறுகதைகளாக இருக்க வேண்டும். எழுதிய கதைகளை தங்கள் வலைத்தளத்தில் அவர்கள் பிரசுரிக்க வேண்டும். அப்படி வலைத்தளத்தில் ஏற்றும்போது, இது 'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது என்பதை குறிப்பிட்டு, இந்தப் பதிவின் லிங்கைத் தர வேண்டும்.
8. சிறுகதை பிரசுரமான தளத்தின் லிங்கை எங்களுக்கு மெயிலில் தெரியப்படுத்தினால் போதும். அப்படி அனுப்பும்போது உங்களது முகவரியையும், தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எந்தப் பெயருக்குக் காசோலை அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு, நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக ஒரு உறுதிமொழியையும் மெயிலில் அனுப்பவேண்டும்.
9. மெயில் முகவரி: [email protected]
10. வெளிநாட்டு பதிவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால், தவிர்க்க இயலாத காரணத்தினால், காசோலை இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். எனவே இந்தியாவில் வங்கிக் கணக்கை வைத்திருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் விலாசத்தை தருவது நல்லது.
11. நகைச்சுவை, க்ரைம், காதல், மாஜிக்கல் ரியலிஸம், அறிவியல் புனைவு இத்யாதி, இத்யாதி ... என எந்த வகையிலும் சிறுகதைகளை எழுதலாம். பரிசோதனைகள் செய்யலாம். யதார்த்தமாகவும் எழுதலாம். அ - யதார்த்தமாகவும் வார்த்தைகளைச் சுழற்றலாம்.
12. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. நடுவர்கள் யார் என்பது இன்னும் 15 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
13. இது குறித்த ஆலோசனைகளும், விமர்சனங்களும் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.
14. போட்டியின் முடிவு ஜூலை 15ம் தேதி அறிவிக்கப்படும்.
தோழமையுடன்
உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக. செல்: 9840907375