சபரிமலையில் பக்தர்களுக்கு மண்டபம் கட்ட தயார்-தமிழகம்
திருவனந்தபுரம்: கேரள அரசு இடம் வழங்கினால், பக்தர்கள் தங்க சபரிமலையில் தமிழக அரசு மண்டபம் கட்டத் தயாராக உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம் மண்டல பூஜை சீசன் தொடங்கும் நிலையில் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து கொடுப்பது தொடர்பான 6 தென் மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், கோவளம் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது.
தமிழக அரசின் சார்பில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த பெரியகருப்பன் பேசுகையில்,
தமிழக மக்கள் சபரிமலை மற்றும் திருப்பதிக்கும், கேரள மக்கள் பழனி, மதுரைக்கும், ஆந்திர மக்கள் திருத்தணி உள்ளிட்ட திருத்தலங்களுக்கும் பரஸ்பரம் சென்று வருவது, நமது மாநிலங்கள் இடையே மத ரீதியான ஒற்றுமை நிலவுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
சபரிமலையில் அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அடுத்த அபிஷேகத்திற்காக மறுநாள் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த நேரத்தில் உணவு, தங்குமிடம், கழிப்பறை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
கேரள அரசு போதிய நிலம் வழங்கினால், பக்தர்கள் தங்குதற்கு, சபரிமலையில் மண்டபம் கட்ட தமிழகம் தயார். இதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்.
சென்னை, கோவை, பழனி, குமரியில் அபிஷேக டிக்கெட் கவுண்டர் திறக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பம்பை நதியை சுத்தப்படுத்த வேண்டும் என்றார்.
இன்று நடை திறப்பு:
ஒவ்வொரு மலையாள மாதப் பிறப்பை முன்னிட்டும் ஐய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
இந் நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல் சாந்தி விஷ்ணு நம்பூதிரி கோயில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தவுள்ளார்.
17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உச்சிகால பூஜை உட்பட சிறப்பு பூஜைகளுடன் உதயாஸ்தமன, படிபூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
நாளை புதிய மேல்சாந்தி தேர்வு:
சுவாமி ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில் ஆகியவற்றுக்கு, குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் நாளை (17ம் தேதி) நடைபெறும். நாளை காலை 8 மணிக்கு இந்த தேர்வு நடைபெறும்.
மாத பூஜைகள் நிறைவடைந்து 21ம் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.