மன்னிக்கும் குணம் கொண்ட ராமர்!
பரசுராமரும், ராமரும் திருமாலின் இரு அவதாரங்கள். ராமரும், பரசுராமரும் தாயிற்சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற கொள்கை உடையவர்
ஆயுதங்கள்
இருவருமே ஆயுதத்தை கையில் தாங்கி காட்சி தருவர். பரசுராமர் கோடாரியையும், ராமர் கோதண்டம் என்னும் வில்லை ஏந்தியிருப்பர். இருவருமே தந்தையால் வாழ்வில் துன்பம் அடைந்தவர்கள். ராமரோ போர்த்தொழில் புரியும் சத்ரியவம்சத்தில் அவதரித்தவர். பரசுராமர் அந்தணர் குலத்தில் அவதரித்தவர்.
அனைவரிடத்திலும் அன்பு
பரசுராமர் பறவைகளிடமும், விலங்குகளிடமும் அன்பு பாரட்டியவர். காடுகளின் வழியே நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டவர்.
ராமர், வேடுவர், அரக்கர் குரங்கு, அனைத்திடமும் அன்பு பாராட்டியவர். 14 ஆண்டுகாலம் வனவாசம் மேற்கண்டபோது நீண்ட தூரம் நடைபயணம் கொண்டவர்.
பரசுராமர், தனது தந்தையான ஜமத்கனி முனிவரை, கார்த்தவீரியன் என்னும் மன்னன் கொன்றதற்காக நாடாளும் மன்னர்கள் வம்சத்தையே அடியோடு அழிப்பதற்காக சபதம் ஏற்றவர்.
சீதையை கடத்தியதற்காக ராவணனை அழிக்க ராமன் சபதம் மேற்கொண்டார்.
மன்னிக்கும் குணம்
மன்னரை கொல்ல சபதமேற்ற பரசுராமர் ராமரையும் கொல்ல முயன்றார். ஆனால் ராமபிரானிடம் தோற்றார். காரணம் பரசுராமர் பிறரை தண்டிப்பதில் மகிழ்ச்சி கொண்டவர். ராமரோ மன்னிப்பதில் மகிழ்ச்சி கண்டார்.
ஒருவேளை ராமர் பரசுராமரைக் கொன்றாலும் ராஜ தர்மப்படி குற்றமாகாது. அந்தணரான பரசுராமரை கொல்வதில் ராமருக்கு உடன்பாடில்லை. எனவே அவர் தொடுத்த அம்பு பரசுராமரின் உயிரை எடுக்காமல் தவசக்தியை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பியது. கடவுளே மனிதனாய் பிறந்தாலும் கூட மன்னிக்கும் குணம் வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அவதார நிகழ்வுகள் நடைபெற்றன.