Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இத்தனை வன்புணர்வுகளுக்கும் என்ன தீர்வைக் கொண்டு வரப் போகிறோம்?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோ தளங்களில் காஷ்மீர் சிறுமியின் பெயர்- வீடியோ

    - எழுத்தாளர் லதா சரவணன்

    ஆயிரம் விழுப்புண்கள் சுமந்த மாமன்னர், தளபதி என்றெல்லாம் வீரம் பேசிய செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கடந்து வந்த பாதையை சொல்லும் இப்போது 50 காயங்களும் சொல்ல முடியாத வன்கொடுமை சுமந்த நிர்பயாக்களையும், ஹாசினி, நந்தினி, புனிதா, நவீனா, வினோதினி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வரிசையில் ஜனவரியில் காயங்களோடு உள்ளுறுப்பும் சிதைக்கப்பட்ட ஆசிபா போன்ற சிறுமிகளின் கொடூரத்தையும் நாம் வாழும் இந்த நாளின் நினைவலைகளாக எழுதிவைக்க வேண்டும்.

    ஒரு மோசமான மனிதம் மறுத்துப் போன உலகில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்று எதிர்காலம் புரிந்து கொள்ளட்டும். முதியவள், இளையவள், ஏன் சிறுமிகள் குழந்தைகள் என எத்தனை உருவகங்கள் பெண் பிறப்பிற்கு இருக்கிறதோ அத்தனையும் தங்கள் சதைகளுக்காகவும், தோல்போர்த்திய எலும்புகளைச் சுமந்து கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் வலியோடு மரித்துப்போகிறார்கள் என்று அவர்கள் உணரட்டும்

    What are the solutions we have for Kathua type horrors?

    எத்தனை வன்முறைகள் பெண் என்னும் பிறப்பின் மேல், ஒரு கட்டத்தில் முலைக்கு வரி, சதியேற்றம், கணவன் இறந்தால் மனைவிக்கு சன்னியாசி வேஷம், உன் உடல் உறுப்புகள் தான் அவளை சிதறடிக்கும் என்று பெற்றவர்களே பெண்ணின் உடலுருப்பினைச் சிதைக்கும் சடங்கு, ஆடவன் ஒரு பெண்ணை நிமிர்ந்து பார்ப்பான், அதனால் வகிட்டில் குங்குமம் வைத்துக்கொள் அப்போது நீ மாற்றானுடையவள் என்று உன்னைக் கடந்து போவான் என்று மண்டைக்குள் இறக்கி வளர்த்திருந்த சமூகம். பெண்ணின் அழுகை சிரிப்பு அளவுகோல் கொண்டு அளந்த நிலை, இவையெல்லாம் மாறி படிப்பில் சாதித்து, பட்டம் பெற்று, சரிநிகர் சமானம் என்று மார் தட்டிக் கொண்டாலும் வீடு அலுவலகம் என்று இரட்டை குதிரைமேல் சவாரி செய்து தன்னையே அழித்துக்கொண்ட கொடுமை சார்ந்த சமுகம் ஒறுபுறம், அங்கொங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்ந்தபோது நாம் கண்டுகொள்ளவில்லை, யார் வீட்டிலோ தானே நமக்கு இல்லையே, எங்கேயோ செய்தி கேட்கும்போது உச் என்னும் ஒலியோடு கூடிய வருத்தம், அதன் பிரதிபலிப்புதான் இன்று தொடர் வன்புணர்வில் சிறுமிகள் சிக்கித் தவிப்பது.

    பள்ளி, கல்லூரி, சாலை, ஏன் தாயின் கருவறைக்குள் இருக்கும் பிள்ளைக்கு கூட இப்போது பாதுகாப்பில்லை. வீரம் அன்பு பாசம் எல்லாவற்றிக்கும் உதாரணம் பெண். கடவுளின் அவதாரம் என அரிதாரம் பூசி அத்தனை வீட்டு சுவர்களில் அலங்கரிக்கப்படும் பெண் தெய்வங்கள், வருடந்தோறும் எத்தனையோ வழிபாடுகள் அத்தனை தெய்வங்களும் எங்கள் மகள் ஆசிபா போன்ற பச்சிளம் பிள்ளைகள் கதறியழுத போது எங்கோ போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். நிர்பயாவின் சீரழிவிற்கு அவள் சென்ற நேரத்தையும் பெண் ஆண் நண்பர்களுடன் ஏன் சென்றாள் என்ற கேள்வியையும் முன் வைத்த மேதாவிகளே அடுத்து வந்த ஹாசினி, நந்தினி, புனிதா, நவீனா இவர்களுக்கும் ஒவ்வொரு காரணம் வைத்திருப்பதைப் போல இப்போது எம் மகள் ஆசீபாவிற்கும் அவள் உறுப்பைக் கிழித்த கயவர்கள் பக்கம் நியாயத்தை அடுக்கிக்கொண்டு வருவதைப் பார்க்கும் போது வெட்கம் கொள்கிறது.

    பெண்ணை பல இடங்களில் தேடினேன் ஆனால் கோவிலில் தேடவில்லை. இந்துக்களின் கோவில்கள் மிகவும் புனிதமானது என்று நம்பினேன் என்று காஷ்மீர் சிறுமியின் தந்தை சொல்லும் போது சத்தியமாய் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுதான் இருந்தது. எது அய்யா அந்தப் புனிதம் என்று காவல் துறையிடம் கண்டுபிடித்து தரும்படி புகார் தரத்தான் வேண்டும். மாதவிலக்கு ஏற்பட்டால், அசைவம் சாப்பிட்டால் கோவிலுக்குப் போகக்கூடாது அது பாவம் என்று உரைத்த இந்துசமூகம் ஒரு பச்சிளம் பெண்ணை 8 காம மிருகங்கள் புணர்வதை மட்டும் ஏன் தவறு என்று உரைக்கவில்லை?! பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு தாயும் அந்த பிஞ்சின் சிதைவில் உறைந்து போய்தான் இருக்கிறோம். ஒரே வாரத்தில் மூன்று பிள்ளைகளின் கோர மரணங்கள் இவை வெளிச்சத்திற்கு வந்தவை இன்னும் வராதவை எத்தனை எத்தனையோ?

    நாம் காஷ்மீர் சிறுமியின் மரணத்திற்கு இதுநாள் வரையில் நிகழ்ந்திட்ட இத்தனை வன்புணர்வுகளுக்கு என்ன தீர்வைக் கொண்டு வரப்போகிறோம். குற்றவாளியையும் நிரபாதி என்ற வாதாட எத்தனையோ கருப்பு சட்டைகள் அணிந்த பிணம் தின்னி கழுகுகள் இருக்கத்தானே செய்கிறது. ஆசீபாவின் மரணத்திற்காக ஹேஷ்டேக் போடுவதிலும், நாலு பக்கத்திற்கு கட்டுரையும் கவிதையும் எழுதுவதிலும், ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்வதிலும் எந்த மாறுதல்களும் வரப்போவதில்லை, அடுத்த வருட செய்திகளில் சென்றவருடம் இன்று என்று ஒரு செய்தியாகிப் போய்விடும் அவையெல்லாம். இந்தக் குப்பையான செய்திகளுக்காக நாம் நம் எழுச்சியை வீணடிக்ககூடாது. தனிமனித ஒழுக்கத்தை கொண்டு வரவேண்டும். அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் இனிவரும் சமூகம் கயவர்களுக்கானதாய் மாறிடும்.

    வெறும் அக்கறை வார்த்தைகளை பகிர்ந்து கொள்வதால் ஆசிபா உட்பட எந்த ரத்தினங்களும் மீண்டு வந்துவிடப்போவது இல்லை, மாறாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் சுயநலமில்லாமல் இறப்பிலும் கூட ஆதாயம் தேடாமல் என்று ஒரு மனிதன் தோன்றுகிறானோ அப்போதுதான் நாடு செழிக்கும் என்று யோசிப்பதை விடவும் ஏற்கனவே வாழ்ந்து கொண்டு இருக்கும் நம்மில் இருந்து மாற்றத்தை துவங்குவோம். பெண்பிள்ளைகளுக்கு பாட்டு டான்ஸ் இதையெல்லாம் கற்றுக் கொடுக்காதீர்கள், கத்தியும், வாளையும் ஏந்தப் பழக்குங்கள். இங்கே பாதுகாப்பிற்கு யாரும் இல்லை குழந்தைகளே, நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.

    இந்த உயிரை பிய்த்து எறியும் மரணத்திற்கு வருத்தத்தைக் காட்டிலும், இவர் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை, அவர் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று அரசியல் செய்யும் அரைவேக்காட்டுத் தலைவர்களை என்னும் போது வெறுப்புதான் மிஞ்சுகிறது. கற்பிப்பவர்களே காமூகர்களாய், காவலாளிகளே வேலியை மேயும் ஓநாய்களாய், பெண்களையும் பெண் பிள்ளைகளையும் வெறும் யோனியும் முலையும் கொண்ட பிறப்புகளாய் பார்க்காதீர்கள் என்று கதறத்தான் தோன்றுகிறது. காளிதேவியின் கண்களின் முன்னே குற்றுயிரும் கொலையுயிருமாய் தன் அங்கம் எதற்காக இவர்களின் தொடுதல்களுக்கு ஆளாகிறது அந்த உறுப்பினை அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள், உடலெங்கும் தன் பற்களை கொண்டு கடிக்கும் இந்த நாய்களின் தேவை என்ன? என்று கூட அறியாத அந்த பிஞ்சு அதரங்கள் மூன்று நான்கு நாட்களில் ஒரு தடவை கூடவா கடவுளே என்று முணுமுணுத்து இருக்காது. நான்கு கரங்களையும் அறுவாளையும், அரக்கனைக் கொய்த தலையுமாய் ஊரைக் காப்பாற்றும் அன்னைக்கு அந்த பிள்ளையைக் காப்பாற்ற எதனால் மனம் வராமல் போயிற்று?! நீ வந்திருக்க வேண்டாம் காளியே உன் கரங்களில் இறந்த தலையோடு தொங்கிக்கொண்டு இருக்கும் அரக்கனுக்கு உயிர் இருந்தால் அவன் கூட அந்தப் பிள்ளையைக் காப்பாற்றியிருப்பான்.

    சாமி படங்களில் இறுதிக்காட்சிகள் போல கடவுளின் சிலைக்கு ஏதேனும் பாதகம் நேர்ந்திருந்தால் ஒருவேளை கடவுள் வந்து தன்னையும் காப்பாற்றி இந்த பிள்ளையையும் காப்பாற்றி இருக்குமோ என்னவோ ?

    காஷ்மீர் சிறுமி இறக்கவில்லை, அவள் வாழ்கிறாள் தான் அடைந்த கொடுமைக்கு இந்த உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது என்று பார்த்து கொண்டு இருக்கிறாள் அந்த வெளிறிய விழிகளால்! 22முறை கற்பழிக்கப்பட்டேன் என்னை யாரும் இந்த உலகத்தில் திரும்பிப் பார்க்கவில்லை, ஆனால் அந்தக் கயவர்களைக் கொலை செய்தேன். அப்போது இந்த உலகே என்னை பயப்பார்வையோடு பார்த்தது என்று கர்ஜித்த பூலான் தேவியாய் இன்னும் எத்தனை பெண்கள் மாறவேண்டும், இனியாவது பெண்ணை போகப்பொருளைப் போல் காட்டும் விளம்பரங்களை நிறுத்துங்கள், பணத்திற்காக தங்கள் உடல் அங்கங்களை காட்டத் துணியும் அழகிகளே நீங்களும் சற்று சிந்தியுங்கள், ரசிகர்களுக்காக என்று ஒரு சொல் வைத்திருக்கிறீர்களே, எத்தனை பேரின் மனத்தில் விஷத்தை விதைக்கிறீர்கள் என்று உணர்ந்து கொள்ளுங்கள். மலிந்து கிடக்கும் வக்கிர எண்ணங்களை விதைக்கும் மனம் இனியாவது மாறட்டும். இன்னும் தன்னைச் சுற்றி அத்தனை ஆபத்துகளில் வாயில் விழும் ஒரு துளித் தேனுக்காக ஒரு இழையில் தொங்கிக் கிடந்த மனிதனின் நிலையில்தான் நாம் இருக்கிறோமோ நம்மை நம் உடன்பிறப்புகளாக பிள்ளைகளாக நினைக்கவேண்டிய பிஞ்சுகளை வெறிக்கொண்டு சுவைக்கத்தான் நாம் இருக்கிறோமா ?!

    அன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காட்டிய கண்ணியத்தை நாம் கையிலெடுப்போம், சீரழிக்கப்படுவள் நம் மகள் நம் சகோதரி நம் அன்னை என்று மனதிற்கொண்டு இம்மாதிரி அநியாயங்கள் எங்கே கண்ணில் பட்டாலும் சட்டத்திற்காக காத்திராமல் நாம் தட்டிக்கேட்போம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+