107. இரவச்சம்
கரவாது உவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.
(1061)
விளக்கம்:
தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண் போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
(1062)
விளக்கம்:
முயற்சி செய்து உயிர்வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர்வாழ்தலை இவ்வுலகைப் படைத்தவன் விதித்திருப்பானானால் அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
(1063)
விளக்கம்:
வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப் போல வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை.
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
(1064)
விளக்கம்:
நுகர்பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும் பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மன அமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது.
தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
(1065)
விளக்கம்:
நெறியோடு கூடிய முயற்சியாலே கொண்டு வந்தது, தெளிந்த நீரைப்போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே ஆனாலும், அதனை உண்பதைவிட இனியது வேறு யாதும் இல்லை.
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
(1066)
விளக்கம்:
தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும் கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதை விட இழிவானது வேறொன்றுமில்லை.
இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
(1067)
விளக்கம்:
கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
(1068)
விளக்கம்:
வறுமைக் கடலைக் கடப்பதற்குக் கொண்ட இரத்தல் என்னும் தோணியானது செல்லும்போது, இடையிலே கரத்தல் என்னும் பார் தாக்கினால் உடைந்து போய்விடும்.
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
(1069)
விளக்கம்:
இரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும். அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால் அந்த உருக்கமும் காய்ந்து போகும்.
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
(1070)
விளக்கம்:
ஒளிப்பவர் "இல்லை" என்று சொன்னதுமே இரப்பவர் உயிர் போய்விடுகிறது. ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ?