For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

126. நிறையழிதல்

By Staff
Google Oneindia Tamil News

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

(1251)

விளக்கம்:

நாணம் என்னும் தாழ் பொருந்திய நிறை என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.


காமம் எனஒன்றே கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

(1252)

விளக்கம்:

காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது. அது என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்துஆள்கின்றது.


மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

(1253)

விளக்கம்:

யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன். ஆனால் அதுவோ என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத்தானே புறத்து வெளிப்பட்டு விடும்.


நிறையுடையேன் என்பேன்மன் யானோ என்காமம்
மறையிறந்து மன்று படும்.

(1254)

விளக்கம்:

இதுவரை நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்துமன்றத்தில் வெளிப்படுகின்றதே.


செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

(1255)

விளக்கம்:

தம்மை வெறுப்பவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையேஅன்று.


செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தாரோ
எற்றென்னை உற்ற துயர்.

(1256)

விளக்கம்:

வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலேயே இருப்பதனால், என்னை அடைந்த இக்காமநோயானது எத்தன்மை உடையதோ.


நாணென ஒன்றோ அறியலம் காமத்தாற்
பேணியார் பெட்பச் செயின்.

(1257)

விளக்கம்:

நாம் விரும்பிய காதலரும் காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் நாணம் என்று குறிக்கப்படும் ஒன்றையும்அறியாதேயே இருப்போம்.


பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.

(1258)

விளக்கம்:

பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று நம் பெண்மை என்னும் அரணைஉடைக்கும் படையாய் இருந்தன.


புலம்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

(1259)

விளக்கம்:

ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன். ஆனால் என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு,அவரைத் தழுவினேன்.


நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்போம் எனல்.

(1260)

விளக்கம்:

தீயிலே கொழுப்பை இட்டாற்போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும்தன்மைதான் உண்டாகுமோ.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X