16. பொறை உடைமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
(151)
விளக்கம்:
தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச்சிறந்த பண்பாகும்.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
(152)
விளக்கம்:
அளவுகடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனினும் நன்மையாகும்.
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
(153)
விளக்கம்:
வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும்.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
(154)
விளக்கம்:
நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கொள்ள வேண்டும்.
ஒறுத்தாரை ஒன்றாக வைப்பாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
(155)
விளக்கம்:
தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார். ஆனால், பொறுத்தவர்களைப் பொன் போல் பொதித்து வைப்பார்கள்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
(156)
விளக்கம்:
தீங்கு செய்தவர்களைத் தண்டித்தவர்களுக்கு அனறு ஒரு நாளே இன்பம் ; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும்வரை புகழ் உண்டு.
திறனல்ல தற்பிற் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
(157)
விளக்கம்:
தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நன்று.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
(158)
விளக்கம்:
செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்றுவிட வேண்டும்.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்.
(159)
விளக்கம்:
எல்லைமீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையானர் ஆவர்.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
(160)
விளக்கம்:
உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலேதான் பெரியவர்ஆவர்.