For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

72. அவையறிதல்

By Staff
Google Oneindia Tamil News

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

(711)

விளக்கம்:

சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும்.


இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

(712)

விளக்கம்:

சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே சொல்ல வேண்டும்.


அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

(713)

விளக்கம்:

தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்களாக, ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்; அவர்களால் எதையும் சாதிக்க முடியாது.


ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

(714)

விளக்கம்:

அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளியினர் ஆக வேண்டும்; அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல் போல ஆகி விட வேண்டும்.


நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

(715)

விளக்கம்:

அறிவால் முதிர்ந்தவர் அவையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது; சிறந்த நன்மை தருவது.


ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

(716)

விளக்கம்:

விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர் முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன் இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம்.


கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றரிதல் வல்லார் அகத்து.

(717)

விளக்கம்:

குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிவதற்கு வல்லமை உள்ளவர்களிடையே, கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும்.


உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

(718)

விளக்கம்:

சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகும்.


புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்.

(719)

விளக்கம்:

நல்ல அறிவாளிகள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாக பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும்.


அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்.

(720)

விளக்கம்:

தம்போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப் பற்றி விரிவாக பேசுதல், அங்கணத்துள்ளே அமுதைக் கொட்டியது போல் பாழாகிவிடும்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X