பங்குனி உத்திர நாளில் குல தெய்வத்தை கும்பிடுவோம் - தடைகள் நீங்கி காரிய வெற்றி கிடைக்கும்
பௌர்ணமி தினம் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், எல்லோரும் அவசியமாக குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.
சென்னை: குல தெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மாசி மகா சிவராத்திரி கொடை நாளிலோ, பங்குனி உத்திர நாளிலோ குல தெய்வத்தை வணங்க நாட்டின் எந்த மூலையில் வசித்தாலும் ஓடி வந்து விடுவார்கள். நம் கூடவே இருந்து நம்மை காக்கும் குல தெய்வங்களை வணங்க வேண்டியதன் அவசியத்தை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒருவரின் குடும்பம் ஆல்போல் தழைக்க குல தெய்வ வழிபாடு அவசியம். கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும். குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் கிடைக்காது என்பதும் நம்பிக்கை.
பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கலாம். குலதெய்வங்கள் கர்மவினையை தீர்க்கவல்லவை.
குலதெய்வ குத்தம் இருந்தால், குலதெய்வத்திற்கு கோபம் இருந்தால், குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட இந்த பங்குனி பௌர்ணமி தின வழிபாட்டை மேற்கொண்டால், எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வம், எல்லா தடைகளையும் தாண்டி நம் வீட்டிற்குள் குடி கொள்ளும் என்று சொல்கிறது சாஸ்திரம்.
குலதெய்வம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் சொல்லப்படுகிறது. ஜாதக கட்டங்களில் குறைகள் இல்லாத நிலையிலும் கிரக சஞ்சாரங்களில் பாதக சூழ்நிலைகள் இல்லாத நிலையிலும் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்சனைகளும் தொடர்கின்றது என்றால் அதற்கு குல தெய்வ தோஷம் காரணமாக இருக்கும்.
ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போனால் அந்த பூஜைகளும் பரிகாரங்களும் பலன் தராது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அசைக்க முடியாத கருத்து. இதற்காகத்தான் குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும் குல தெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. அதே போல கிரகங்களின் கோசார பலன்களும்.கிரக பெயர்ச்சியின் நல்ல பலன்களும் முழுமையாக பலன் தர வேண்டுமென்றால் அதற்கு குலதெய்வ அனுக்கிரகம் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
பொதுவாக குலதெய்வ வழிபாடு என்பது இனத்திற்கு இனம் ஜாதிக்கு ஜாதி குலத்துக்கு குலம் மாறுபடும். ஒரே ஜாதியில் இருப்பவர்களில் கூட குடும்பத்துக்கு குடும்பம் வழிபாட்டு முறைகளும் சம்பிரதாயங்களும் மாறுபடுகின்றன. குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவோ, ஆண் தெய்வங்களாகவோ இருப்பார்கள். பல இடங்களில் குலதெய்வம் என்பது பல தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களாகவும் தங்களின் குல மக்களுக்களின் நன்மைக்காக உயிர்தியாகம் செய்தவர்களாகவும் இருப்பதுண்டு. அந்த குலத்தினரால் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவே குல தெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதனால் தான் குலதெய்வ வழிபாட்டினை ஒரு கடமையாகவும் சம்பிரதாயங்கள் சொல்கின்றன.
குல தெய்வம் மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அது பெருமாளாக இருக்கலாம்,கருப்பு சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம். அடுத்து குலதெய்வம். பிறகு காவல் தெய்வமாக ஒரு தெய்வம் - அது ஆண் தெய்வமாக இருக்கலாம் அல்லது பெண் தெய்வமாக இருக்கலாம்.
மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஐய்யனார், மதுரை வீரன், காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் உள்ளனர். அதேபோல வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி, எல்லைப் பிடாரி, பெரியாச்சி, எல்லை மாரி, பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்கள் உள்ளனர். இந்தக் காவல் தெய்வங்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாது. படிப்பு, வேலை என்று வெளியூர், வெளிநாடு போனவர்கள் குலதெய்வத்தை மறந்து விடுவார்கள். இதனால் குல தெய்வ தோஷம் ஏற்படும். பொதுவாக குலதெய்வ தோஷம் இருந்தால் எந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது, காரணமற்ற காரியதடைகள் அதிகமாகும், உறவுகளில் ஒற்றுமையின்மையும் குடும்ப அமைதியின்மையும் இருக்கும். குறிப்பாக திருமணம் வீடுகட்டுதல் போன்ற சுபகாரிய தடைகள் தொடரும்.
குல தெய்வ வழிபாடுகளை வருடத்திற்கொருமுறை செய்ய வேண்டும். மாசி மகா சிவராத்திரி, மாசி அமாவாசை, பங்குனி உத்திரம் நாட்களில் அவரவர்கள் குல தெய்வத்தினை முறைப்படி வணங்க வேண்டும். காரியத்தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.