மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 24ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவ
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. திருக்கல்யாணம் முடிந்த பிறகு சுவாமி அம்மனை மணக்கோலத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் மட்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. அழகர்மலை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. கள்ளழகர் மதுரைக்கு வராமல் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தொட்டியில் எழுந்தருளினார்.
இந்த ஆண்டும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப்போல பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இந்த அறிவிப்பு பக்தர்களை கவலையடையச் செய்தது. ஏராளமான பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பகல் 11.30 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 22ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஸ்ரீராம நவமி, சித்ரா பவுர்ணமி, அட்சய திருதியை, சித்திரை மாதத்தில் முக்கிய பண்டிகை நாட்கள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் 24ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். திருக்கல்யாண நிகழ்வினை நேரில் காண பக்தர்களுக்கு அனுமதி கிடையாது அந்த வைபவத்தை நேரலையில் தரிசனம் செய்யலாம். திருக்கல்யாணம் முடிந்து மணக்கோலத்தில் காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா வழக்கம் போல நடைபெற வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் சித்திரை தேரோட்டமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் கடந்த ஆண்டைப்போல அழகர் மலையிலேயே எழுந்தருளி மீண்டும் முனிவருக்கு சாப விமோசனம் தரப்போகிறார். கள்ளழகரை இந்த ஆண்டும் நேரில் காண முடியாமல் போய் விட்டதே என்பது மதுரைவாசிகளின் கவலையாகும்.