துர்கா,லட்சுமி,சரஸ்வதி..முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி..வழிபடும் முறைகள்!
சென்னை: மலைமகள், அலைமகள், கலைமகளை போற்றி வணங்கும் பண்டிகை நவராத்திரி பண்டிகையாகும். தமிழ்நாட்டில் புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி விஜயதசமி வரை பத்து நாட்களும் கோவில்களிலும் வீடுகளிலும் நவராத்திரி பண்டிகை களைகட்டும். கொலு வைத்து பஜனைகள் பாடி அம்மனை வழிபாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களும் அன்னையை எந்த அம்சமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமாக அம்பிகையை பூஜித்து வழிபாட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் சிறப்பம்சமாகும். ஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானிங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது விதமான அலங்காரங்கள், என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியரையும் பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும். இவற்றுடன், கோலங்கள், பொட்டுக்கள், திரவியங்கள், தானங்கள், மந்திரங்கள், வாத்தியங்கள், பெயர்கள் என ஒவ்வொன்றும் ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுகிறது.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும் காட்சியளிக்கிறார் தேவி. நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என வணங்குகின்றனர் என்ற கேள்வி எழுவது இயல்பு. கலைமகளுக்குத்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு முதல் பூஜை என்ற கேள்வி நியாயப்படி எழுவது இயல்பு.
ரத்த பீஜன்..மகிஷாசுரன்..அசுரர்களை வதம் செய்ய அம்பிகை.. நவராத்திரி புராண கதை இதுதான்!
துர்க்கா தேவி
சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம். ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள்.
முதல்நாள்
நவராத்திரியின் முதலாம் நாளில் நாம் சக்தித் தாயை சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்ததால், சாமுண்டா எனவும் அழைப்பர். முதல் ராத்திரியின்போது மலர்களால் அலங்கரித்து வழிபட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள். முதல் நாளில் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.
இரண்டாம் நாள்
இரண்டாவது ராத்தியின்போது அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். ஆபரணங்களை அவளுக்கு அணிவித்தால் சர்வபூர்ண பூஜிதமாக அருள் பாலிப்பாள். இரண்டாம் நாள் தேவி கவுமாரி தேவியாகவும் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.
மூன்றாம் நாள்
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். அன்னை கன்யா கல்யாணி என்றும் அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும். மூன்றாவது ராத்திரியின்போது முதலில் செய்வித்த பூஜைகளுக்கு மகிழ்ந்து ஞானத்தை நமக்கு அருள்கிறாள்.
நான்காம் நாள் அலங்காரம்
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை நான்காவது நாளில் இருந்து பூஜிக்கின்றனர். நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். வைஷ்ணவி தேவியாகவும் வழிபடலாம். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.அன்னைக்கு பாசம் அதிகம். அதனால் என்னை பூஜிப்பவர்களை எப்போதும் கைவிட மாட்டேன் என்று கூறுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
ஐந்தாம் நாள் அலங்காரம்
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். சகல சவுபாக்கியங்களும், ஆயுள் விருத்தியும் கிட்டும். பஞ்ச பூதங்கள் நம்மை சரிவர நடத்தும். மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.
ஆறாம் நாள் அலங்காரம்
ஆறாவது நாளில் அன்னையை சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. தேங்காய் சாதம் படைத்து வணங்கலாம். அறுசுவையுடன் அல்லாது போனாலும், பசியின்றி இருக்க உணவு கிடைக்கும் வண்ணம் நம்மை மகாலட்சுமி காத்தருளுவாள். இந்த ஆறு நாட்களும் முடிந்த பிறகு வித்தைக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்க வேண்டும்.
ஏழாம் நாள்
ஏழாம் நாளில் தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம். ஏழாவது நாளில் நாதஸ்வரூபமாக எழுந்தருளும் கலைவாணி நமக்கு வினயத்தைத் தந்தருளுகிறாள்.
எட்டாம் நாள்
எட்டாவது நாளில் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. இந்த நாளில் அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள் அன்னை.
ஒன்பதாம் நாள்
ஒன்பதாம் நாளில் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபடலாம். ஒன்பதாவது நாளில் அழியாத தன்மையைத் தருகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது என்பதை உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி
விரத பலன்கள்
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள். நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்று நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.