வைகையில் பெருகிய வெள்ளம்...சித்திரை திருவிழா காண வரும் பக்தர்களுக்கு மா மதுரை செயலி - களைகட்டுது
சித்திரை திருவிழா தகவல்கள் அடங்கிய 'மா மதுரை' செயலியை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், காவல்துறை ஆணையர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிமுகம் செய்தனர்.
மதுரை: சித்திரை திருவிழாவிற்கு வரும் மக்களின் வசதிக்காக மா மதுரை செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவாமி வரும் வழி, மருத்துவ சேவை, அவசர உதவி எண்கள், கோயில், முக்கிய இடங்களுக்கு செல்லும் வழித்தடம், விழா நிகழ்ச்சிகளின் கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை அறிய 'மாமதுரை' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழாவினால் மதுரை மாநகரம் களைகட்டியுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் தினசரியும் காலையும் மாலையும் சாமியும் அம்மனும் ஊர்வலம் வர பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்றைய தினம் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ரத்ன செங்கோல் ஏந்தி மதுரையின் அரசியாக அரசாட்சி செய்து வருகிறார் மீனாட்சி அம்மன். இன்றைய தினம் திக் விஜயம் செல்கிறார். நாளைய தினம் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருக்கல்யாணம் காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதி
திருக்கல்யாணத்தை காண தெற்கு கோபுரம் வழியாக பக்தர்களுக்கு இலவச அனுமதி உண்டு. முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், அரசு அதிகாரிகள், ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெற்றுள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். எந்தவொரு பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.
மேற்கு, வடக்கு ஆடி வீதிகளில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர வேண்டும்.

வாகன நிறுத்தும் இடங்கள்
திருக்கல்யாணம் முடிந்த பின்னர் வடக்கு, மேற்கு வாசல் வழியாக வெளியேற வேண்டும். போலீஸ் சார்பில் முககவசம், குடிநீர் வழங்கப்படுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள், மஞ்சள்நிற அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் வாகனங்களை மேற்கு ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும். பிங்க் அட்டை வைத்திருப்பவர்கள் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற அட்டை வைத்திருப்பவர்கள் தெற்கு ஆவணி மூல வீதியிலும், அனுமதி அட்டை இல்லாதவர்கள் தெற்கு, வடக்கு மாசி வீதிகளிலும் நிறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை தேரோட்டம்
திருக்கல்யாணத்திற்காக கோவிலில் அலங்கார ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பார்கள். பல்லாயிக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம்பிடித்து இழுப்பார்கள். சித்திரை திருவிழா தகவல்கள் அடங்கிய 'மா மதுரை' செயலியை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், காவல்துறை ஆணையர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

சித்திரை திருவிழாவிற்கு மாமதுரை செயலி
விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை எந்த பகுதியில் நிறுத்துவது, சுவாமி வரும் வழி மருத்துவ சேவை, அவசர உதவி எண்கள், கோயில், முக்கிய இடங்களுக்கு செல்லும் வழித்தடம், விழா நிகழ்ச்சிகளின் கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை அறிய 'மாமதுரை' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

காவல்துறை உதவி எண்கள்
சித்திரை திருவிழா பாதுகாப்பில் 3500 போலீசார் ஈடுபடுகின்றனர். திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு உதவி தேவைப்பட்டால் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை 83000 17920ல் தொடர்பு கொள்ளலாம். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் நடக்கிறது. பச்சை நிற அனுமதி அட்டை உள்ளவர்கள் ஏ.வி.பாலத்திலும், பிங்க் நிற அட்டை உள்ளவர்கள் அரசு மருத்துவமனை எதிரே மினி பஸ் ஸ்டாண்டிலும், நீல நிற அட்டை உள்ளவர்கள் அண்ணா பஸ் ஸ்டாண்டிலும், அனுமதி அட்டை இல்லாதவர்கள் கிழக்கு, வடக்கு மாசி வீதிகள், குருவிக்காரன் சாலை, சட்டக்கல்லுாரி ரோட்டிலும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

வைகையில் வந்த வெள்ளம்
இதனிடையே திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதையொட்டி வைகை அணையில் இருந்து 11ம் தேதி மாலை தண்ணீர் அணையில் உள்ள சின்ன மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 1072 கனஅடி தண்ணீர் சின்ன மதகு வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது இன்று மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கல்பாலம் வந்தடைந்தது. அதோடு தொடர்ந்து மூன்று நாட்களாக மதுரை தேனி மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக மழை வெள்ள நீரும் வைகை ஆற்றில் சேர்ந்த ஓடி வருகிறது.16ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இல்லாத நிலையில் இந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications