வாகன யோகம் தரும் கோவை ஈச்சனாரி விநாயகர் ஆலயம்
நமக்கு ஏற்படும் கவலைகளை களைபவர் விநாயகர். கோவை அருகே ஈச்சனாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விநாயகர் மிகப்பிரம்மாண்டமானவர்.
கோவை: காஞ்சி சங்கராச்சாரியார் அருள்வாக்குப்படி ஈச்சனாரியில் எழுந்தருளியுள்ள விநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.
விநாயகர் ஈச்சனாரிக்கு வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டார், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டது.
காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டைசெய்யப்பட்டது. விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது. இத்திருத்தலம் உருவாகி 475 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 1990ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் காட்சியளிப்பது பக்தர்களிள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே கோவில் வளாகம் கட்டப்பட்டு விருத்தி செய்யப்பட்ட பின்பு, கோவிலை இந்து அறநிலையத்துறை எடுத்து அரசின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரையும் இடைவெளி இன்றி தொடர்ந்து இத்திருத்தலத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், கணபதி ஹோமம் கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் 27 நட்சத் திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலும், 27 வித மலர் அலங்கார அழகு செய்யப்பட்டு பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும்.இந்த கோவிலுக்கு இது பிரசித்தமானதாகும்.
மேலும் தினமும் நடைபெறும் பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும், அதாவது, பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீறு மற்றும் மின் கட்டணங்களும் கட்டளைதாரர்களே செலுத்தி வருவது சிறப்பான அம்சமாகும். இந்த திருத்தலம் வந்து விநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.
தொழிலில் நல்ல முன்னேற்றம், விவசாயத்தில் அதிக மகசூல், நினைத்தபடி திருமண வாழ்க்கை கிடைப்பதும் நிச்சயம் என்கின்றனர் இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், பலனை அடைந்தவர்கள் தங்கள் நேர்த்தி கடனை, பால் அபிஷேகம் செய்து, பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர்.
வாகன பூஜைக்கு பெயர்பெற்ற ஆலயம் இது. கோவை நகர மக்கள் புதிய வாகனம் வாங்கினால் பதிவெண்ணை வாகனத்தில் எழுதுவதற்கு முன் விநாயகரிடம் சமர்ப்பித்த பின்தான் மற்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு ஏழை எளியவர்களுக்கு திருமணம் எந்தவித தொகையும் பெறாமல் நடத்தப்படுகிறது.
தமிழகத்திலேயே விநாயகருக்கு தங்கத்தேர் பவனி இங்குதான் நடைபெறுகிறது. தங்க ரதம் ஒன்று தயார் செய்து, தங்க தேர் நேர்ச்சையும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.30 மணியளவில் கட்டளைதாரர்கள் அடிப்படையில் விநாயகர் தங்கத் தேரில் பவனி வந்து அருள்புரிவார். அம்மையப்பன் அம்சமாக அதாவது அர்த்தநாரி இங்கு விநாயகர் அருள்புரிகிறார்.
எங்கு எப்படி செல்வது
அன்பே சிவம் என்பதற்கேற்ப, காலணி விடும் இடத்திலும் சரி தரிசனம் செய்யும் இடத்திலும் சரி, அர்ச்சகர்களிடமும் சரி, திருக்கோவில் நிர்வாகிகளிடமும் சரி இன்முகத்துடன் உபசரிக்கும் தன்மையை இங்கு காணலாம். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் உள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில்.