தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழா - வானத்தில் வட்டமிட்டு ஆசி கொடுத்த கருடபகவான்
ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது கோபுர கலசத்திற்கு மேலே கருடபகவான் வட்டமடிப்பது வழக்கம். அதை தரிசித்த பின்னர்தான் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்வார்கள்.
தஞ்சாவூர்: பெரியகோவில் கும்பாபிஷேகம் தமிழில் திருமறைகள் ஒலிக்க கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. யாகசாலை பூஜைகள் முடிந்து கலச தீர்த்தங்கள் கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு ஆசி வழங்கியது. அதனைக் கட்ட பக்தர்களும் சிவனடியார்களும் பரவசமடைந்தனர். புனித தீர்த்தங்களை கோபுர கலசங்களின் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது கோபுர கலசத்திற்கு மேலே கருடபகவான் வட்டமடிப்பது வழக்கம். அதை தரிசித்த பின்னர்தான் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். அதனை நல்ல சகுனம் என்றே பக்தர்கள் கருதுகின்றனர்.
விஷ்ணுவின் அம்சம் கருடன். கருட தரிசனம் பார்ப்பது நல்ல சகுனம் என்பார்கள். கருடனைத் தரிசிக்கும்போது நம்முடைய மனம் நிறைவடைகிறது. நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடந்தாலும் அந்த நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்கள்.
கருடாழ்வார்
கருடாழ்வார், மகா பலம் உடையவர். கச்யபர் - விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாக ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் கருடாழ்வார். இவருக்கு மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் போன்ற எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.
கருடசேவை தரிசனம்
மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில் பெரிய திருவடி என்று போற்றப்படுபவர். ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவது தனிச்சிறப்பு. கருடனை வணங்கும்போது மானசீகமாக வணங்க வேண்டும். ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருப்பதி, நவதிருப்பதிகள், திருநாங்கூர், திருநாராயணபுரம் நாச்சியார் கோவில் ஆகிய திருத்தலங்களில் நிகழும் கருட சேவைகள் தனிச்சிறப்பு உடையது.
பக்தர்கள் பரவசம்
கும்பாபிஷேகம் நடைபெறும் ஆலயங்களிலும் யாகங்கள் நடைபெறும் இடங்களிலும் கருடன் வட்டமிடுவது சிறப்பு. கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம். தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுதும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போதும் வானத்தில் கருட தரிசனம் கிடைத்த பிறகே கும்பாபிஷேகத்தை நடத்தி மகிழ்கின்றனர்.
நோய் நீக்கும் கருட தரிசனம்
கருடசேவையைத் தரிசிப்பதால் பாவம் போக்கும். நாகத் தோஷம் போக்கும். தோல் வியாதிகள், நீண்ட நாள் பிணி நீங்கும். கருட தரிசனம், பூஜைகளிலும் மந்திர உச்சரிப்பிலும் அறியாமல் நிகழ்கிற தவறுகளால் ஏற்படும் பாவத்தைப் போக்க வல்லது .
எந்த நாளில் என்ன பலன்
கருடனை ஞாயிறன்று தரிசனம் செய்தால் நோய் அகலும், திங்கட்கிழமை கருடனை தரிசிப்பதால் குடும்ப நலம் பெருகும். செவ்வாய்கிழமை கருடனை தரிசிப்பதால் தைரியம் கூடும், புதன்கிழமை கருடனை தரிசிப்பதால் எதிரிகள் இல்லாத நிலை உருவாகும். வெள்ளிக்கிழமை கருடனை தரிசித்ல் பணவரவு கிடைக்கும். சனிக்கிழமை கருடனை தரிசித்தால் நற்கதி கிடைக்கும்.