சந்திர கிரகணம்: ரிஷபம், விருச்சிக ராசிக்காரர்கள் மறக்காமல் தானம் கொடுங்க - தலைமுறைக்கும் புண்ணியம்
சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாததால் யாருக்கும் கிரகண தோஷம் இல்லை என்றாலும் இன்றைய தினம் ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம்.
சென்னை: வானியல் ரீதியாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம். இன்றைய தினம் ரிஷப ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் ரிஷப ராசிக்காரர்களும், நேர் எதிரே சந்திரனின் பார்வை விழும் விருச்சிக ராசிக்காரர்களும் தானம் செய்தால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.
இன்றைய தினம் நிகழும் சந்திர கிரகணம் மிக நீண்டதாக உள்ளது. சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமையான இன்று 19ம் தேதி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கியுள்ள சந்திர கிரகணம் மாலை 5.32 மணி வரை மிகவும் நீண்டு நிகழ்கிறது. அதாவது 6 மணி நேரம் 2 நிமிடங்கள் என நீடிக்கின்றது. இந்த கிரகணத்தின் உச்சம் மதியம் 2மணி 32 நிமிடத்தில் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வானமண்டலத்தில் குறைந்தபட்சம் நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர கிரகணம் கூட நிகழும். சூரிய கிரகணம் அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி அன்றும் நிகழும்.
வானியல் ரீதியாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜோதிட ரீதியாக பார்த்தால் ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு காரணமான கிரகங்களாகும், ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும். விண்வெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப்பாதையும் வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என அழைக்கப்படுகிறது.
பெளர்ணமி அன்று முழு பௌர்ணமி நிகழும் நேரத்தில் சூரியனும் சந்திரனும் மிகவும் சரியாக 180 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள், அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார். பெளர்ணமி அன்று இவ்விருவரும் ராகு அல்லது கேதுவின் பிடியில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சந்திர கிரகணம்... என்னென்ன நம்பிக்கைகள் - கர்ப்பிணிகள் ஏன் வெளியே நடமாடக்கூடாது
எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரகணம் நிகழும் என கூறியுள்ளனர்.
சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.
இன்றைய தினம் ரிஷப ராசியில் சந்திரன் ராகு உடன் இணைந்திருக்கும் போது நிகழ்கிறது. இன்றைய தினம் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் பகல் நேரத்தில் கிரகணம் நிகழ்வதால் யாருக்கும் கிரகண தோஷம் இல்லை. எனவே கிரகண பரிகாரம் தேவையில்லை. இருப்பினும் ரிஷபம் - விருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம். இன்றைய தினம் செய்யும் தானம் தலைமுறைக்கும் புண்ணியத்தை தரும் என்பது ஐதீகம்.