Saravana Bhavan Rajagopal கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது!
ஆன்மீகவாதியாக இருந்தாலும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தாலும் கொலை செய்தால் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பது சரவணபவன் ராஜகோபால் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது.
Recommended Video
சென்னை: சரவணபவன் ராஜகோபால் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது மரணம் பற்றிய செய்திகள் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. சிறந்த ஆன்மீகவாதியாக இருந்து கோவில் இருக்கும் இடங்களில் எல்லாம் சரவணபவனை தொடங்கி ருசியான உணவுகளை கொடுத்த சரவணபவன் அண்ணாச்சியின் வாழ்க்கை இன்றைய மக்களுக்கு மிகப்பெரிய படிப்பினை. கொலை செய்து விட்டு தப்பிக்க கோவில்கட்டி கும்பாபிஷேகம் செய்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் உணர்ந்து கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னையடி என்ற சிறு கிராமத்தில் 1947ஆம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். அந்தக் கிராமத்துக்கு பஸ் வசதி கூட இல்லை. இன்றைக்கு அது புன்னை நகராகி உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. காரணம் அங்குள்ள வனதிருப்பதி கோவில்.
ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் மிகப்பெரிய நம்பிக்கை கொண்ட சரவணபவன் ராஜகோபால் தனக்கு இருந்த துயரங்கள் தீர ஜோதிடர்களின் ஆலோசனைப்படி கட்டியதுதான் இந்த வனதிருப்பதி கோவில். சிறந்த முருக பக்தரான ராஜகோபால் பெருமாள் கோவில், சிவன் கோவில் கட்டியது ஏன் என்ற கேள்வி எழலாம். அதுவும் ஒரு காரணத்தோடுதான். ஏழ்மை நிலையில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக முன்னேறி தென்னிந்திய உணவின் சுவை உலக மக்கள் அறியச் செய்து இன்றைக்கு குற்றவாளியாக மரணத்திருக்கும் சரவணபவன் ராஜகோபால் வாழ்க்கை பலருக்கும் ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.
டீ மாஸ்டர் ராஜகோபால்
ஏழ்மை விரட்டிய வறுமை படித்ததோ ஏழாம் வகுப்புதான். ஹோட்டலில் டேபிள் துடைத்து வயிறை கழுவினார். தரையில் உறக்கம் நிம்மதியை கொடுத்தது. அப்போது தெரியாது தான் மிகப்பெரிய ஹோட்டலுக்கு முதலாளியாக மாறுவோம் என்று. டீ போட கற்றுக்கொண்ட ராஜகோபால் பின்னர் மளிகைக்கடையில் வேலைக்குப் போனதுதான் திருப்புமுனையாக அமைந்தது.
வெற்றிக்கனியை ருசிக்க ராஜகோபால்
சென்னையில் மளிகைக்கடையை தொடங்கி பின்னர் கே கே நகரில் சிறு ஹோட்டலை ஆரம்பித்து படிப்படியாக வெற்றி தேவதையின் ஆசியோடு வாழ்க்கையில் முன்னேறினார். முருகனின் ஆசியோடு தொழிலும் சக்கைபோடு போட்டது. 50 ஆண்டுகள் வரை அவரது வாழ்க்கையில் வெற்றி மட்டுமே இருந்தது. ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் கிடைத்தது.
படிப்படியாக வீழ்ச்சி
ராஜகோபாலுக்கு வசதி வாய்ப்புகள் பெருக பெருக இன்னும் இன்னும் வேண்டும் என்ற ஆசைதான் அதிகரித்தது. அதற்கு தூபம் போட்டவர்கள் அவரது ஆஸ்தான ஜோதிடர்கள். முதல்மனைவி இருக்கும் போதே 1990ல் இரண்டாவதாக கிருத்திகாவை திருமணம் செய்தார். 2000ஆம் ஆண்டில் ஜீவஜோதி மீது ஆசைப்பட்டதுதான் அவர் வாழ்க்கையில் செய்த மிகப்பெரும் தவறு. அவரது சாம்ராஜ்யத்தையே ஆட்டம்காண வைத்து விட்டது.
படுகுழியில் தள்ளிய பெண்ணாசை
தனது ஹோட்டலில் வேலை செய்தவரின் மகளை மூன்றாவது மனைவியாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்தவர். கிருத்திகா போலவே ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால் சாந்தகுமார் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் கடைசியில் கொலை செய்து அதற்காக சிறைச்சாலை வாசலை மிதித்தார்.
ஆயுள் தண்டனை கைது
சாந்தகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலுக்கு 2004ஆம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த தண்டனையால் சிறைக்குப் போனார். இதுவே இரண்டாவது மனைவியுடனான பிரிவுக்கும் காரணமானது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி 55 வயதிலேயே நோய்களும் அவரை ஆக்கிரமித்தன. முதல் மனைவி, வாரிசுகளின் குடும்ப மோதல், வழக்குகள் என வாட்டி வதைக்க ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயநோய் என நோயின் பிடியில் சிக்கினார்.
சொந்த ஊரில் கோவில்
வழக்குகளின் பிடியில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக ஆன்மீகவாதியாக மாறிப்போனார் ராஜகோபால். கோவில் பணிகளுக்கு அதிகம் டொனேசன் கொடுத்தார். அன்னதானம் செய்தார். சொந்த ஊரில் சிவனும் பெருமாளும் இருக்கும் கோவில் கட்டினால் வழக்குகளில் இருந்து தப்பலாம் என்று ஜோதிடர்கள் சொன்னதன் பேரில் புன்னைநகரில் கட்டிய கோவில்தான் இன்றைக்கு வனதிருப்பதியாக வளர்ந்து நிற்கிறது.
தப்ப முடியாது
வனதிருப்பதி கோவில் 9.07.2009 கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 22 மாதத்தில் கட்டப்பட்ட கோவில் என்றாலும் அழகு மனதில் அமைதியை ஏற்படுத்தும். தென்மாவட்ட சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியக் கோயிலாக சில மாதங்களிலேயேஇந்தக் கோயில் கருதப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கில் இருந்து தப்பித்து விடலாம் என்று உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்த ராஜகோபாலுக்கு அதே ஆண்டில் இடி இறங்கியது. சாந்தாரம் கொலை வழக்கில் 2009ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
வீழ்ந்த அண்ணாச்சி
கோவில் கட்டினால் வழக்கில் இருந்து தப்பலாம் என்றும் பிரிந்து சென்ற இரண்டாவது மனைவி திரும்ப வருவார் என்றும் ஜோதிடர்கள் அட்வைஸ் செய்தனர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. வழக்கு தண்டனைக்குப் பின்னர் கடந்த 10 ஆண்டுகாலமாக கோவிலில் காலம் கழித்தார் ராஜகோபால். ஆனாலும் 10 ஆண்டுகாலம் கழித்து சிறை தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். ஜூலை 7ஆம் தேதி அவருக்கு சிறைக்கு செல்ல நாள் குறிக்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேகம் நடத்தி 10 ஆண்டுகள் பல அன்னதானங்கள் செய்தும் கடைசியில் செய்த தவறுக்கு தண்டனை உண்டு என்பதை கடவுள் உணர்த்தினார். ஆனாலும் சிறைக்கு செல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபால் இப்போது குற்றவாளி என்ற பெயரோடு மரணமடைந்துள்ளார். அவர் செய்த அன்னதானத்திற்கு மிகச்சிறிய கருணையை மட்டுமே கடவுள் காட்டியுள்ளார்.