பிரிந்த தம்பதிகளை இணைத்து வைக்கும் ஸ்ரீராம நவமி
இழந்த பதவி கிடைக்கவும், துன்பங்கள் நீங்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீராம நவமி விழாவுடன் சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது.
சென்னை: ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராம பிரான். சில ஆண்டுகளில் சித்திரை மாதமும் வருவதுண்டு. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். ஸ்ரீராமர் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர்.
நாளை நாடுமுழுவதும் ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம்பிக்கை.
பட்டாபிஷேக ராமருக்கு அபிஷேகம்
வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்ரீராமர், சீதாலக்ஷ்மி, லக்ஷ்மணர், பரதன், சத்ருக்னன், ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் ஒரே கல்லில் காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமராக காட்சி தருகிறார்.
ஸ்ரீராம ஜென்ம விழா
25.03.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமர் ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு அர்ச்சனை நடைபெற உள்ளது.
ஸ்ரீராமருக்கு நைவேத்தியம்
வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதனமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது. பின்னர் நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், காட்டில் வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் தேவைப்பட்டதாம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது.
ஸ்ரீராம நவமி ஹோமம்
குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கவும், தன்வந்திரி பீடத்தில் சென்ற 23.03.2018 முதல் 26.03.2018 வரை நடைபெறும் சம்வத்ஸர விழாவில் சகல ஐஸ்வர்யம் தரும் சகல தேவதா ஹோமத்துடன் சிறப்பு ஹோமமும், மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது. தொடர்புக்கு :ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை-632513.தொலைபேசி : 04172-230033 / 09443330203