திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா - பக்தர்கள் இன்றி நடைபெற்ற பந்தகால் முகூர்த்தம் விழா
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பந்தகால் நடும் முகூர்த்த விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தல் அமைத்தல், சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. அக்னி தலமான திருவண்ணாமலை தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம். இந்த மலையை இன்றைக்கும் ஏகப்பட்ட சித்தர்கள் அரூபமாக கிரிவலம் வருகின்றனர். இங்குள்ள மலையானது சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்றாடம் விஷேசம் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். நவம்பர் 19ஆம் தேதியன்று மலைமீது பிரம்மாண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். தீபத்திருவிழாவிற்காக 60 நாட்களுக்கு முன்பு இருந்தே ஏற்பாடுகள் தொடங்கிவிடும்.

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் மகா தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்திருவிழாவில் பங்கேற்பார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு கடந்த ஆண்டும் இந்த ஆண்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இன்றைய தினம் விழாவிற்காக பந்தக்கால் நடப்பட்டது. இன்று காலை சம்மந்த கணேசர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது.

வழக்கமாக இந்த விழாவின் போது பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்வர். தற்போது மத சடங்குகளில் கூட்டமாக பங்கேற்க தடை இருப்பதால் பக்தர்களின்றி பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது. கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் முறைதாரர்கள் மட்டுமே முககவசம் அணிந்து கொண்டு கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.













Click it and Unblock the Notifications