கண்பார்வை காக்கும் மீனாட்சி - தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது பார்வை பத்திரம்
இந்த வருடம் அக்டோபர் 12, 2017 அன்று “உலக பார்வை தினம் 2017” ஆக அனுஷ்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து கண் பார்வைக்கும் ஜோதிடத்திற்க்கும் உள்ள தொடர்பை இங்கு காண்போம்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கண்ணில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஜோதிட காரணங்கள் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.
உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்க்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்க்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை வரும் தேதியை உலக கண் பார்வை இழப்பு தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை விழிப்புணர்வினை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறது. அக்டோபர் 12, 2017 அன்று "உலக பார்வை தினம் 2017 அனுஷ்டிக்கப்பட்டது.
பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் உகந்ததல்ல.
கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் நமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே உலக பார்வை தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும்.
நாற்பது வயதைத் தாண்டும்போது பார்வையில் ஏற்படும் குறைபாட்டினால் கருப்பாக இருக்கிற எழுத்துகள் பளிச்சென்று தெரியாமல் வெள்ளைப் பேப்பரோடு சேர்ந்து வெள்ளையாக தெரியுமாம். இதைத்தான் வெள்ளெழுத்து என்கிறோம். தலைமுடி நரைப்பதைப்போல, வயதான காலத்தில் தோலில் சுருக்கம் விழுவதைப் போல, வெள்ளெழுத்துப் பிரச்சினையும் வயதாவதால் வருவது தான். வெள்ளெழுத்து பிரச்சினை நாற்பது வயதை நெருங்கும்போது வந்து விடும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்துகொள்ளுவதை வழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். இரத்தத்தில் இருக்கும் அதிக அளவு சர்க்கரை கண்களை பாதிக்கும். 20 வயதிலிருந்து 74 வயது வரை உள்ளவர்களுக்கு பார்வை இழப்பிற்கு சர்க்கரை நோய் முதல் மற்றும் முக்கியக் காரணமாக உள்ளது. சிறிய அளவில் ஆரம்பிக்கும் கண் குறைபாடுகள் சர்க்கரை நோயினால் அதிகரிக்கக்கூடும். அதனால் பார்வையில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலும் கண் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
தற்போது அதிகப்படியான தகவல் தொடர்பு சாதனங்களின் உபயோகம் மற்றும் கணினி உபயோகம், தொலைகாட்சி ஆகியவையும் கண் பார்வை கோளாரை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களாகும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கண்ணில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஜோதிட காரணங்கள் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.
பார்வை குறைபாட்டை உண்டாக்கும் ஜோதிட கிரஹ அமைப்புகள்:
ஜோதிடத்தில் சூரியன் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரக கிரகங்களாக அமைந்துள்ளனர். என்றாலும் கண்களையும் பார்வையை பொருத்தவரை காரக கிரகம் யார் தெரியுமா? நம்ம கட்டுரையின் நாயகனான சுக்கிரபகவானேதாங்க!
அசுப தொடர்பு இல்லாமல் சுக்கிரன் லக்னத்தில் அமைந்துவிட்டால் அவர்களுக்கு களையான முகமும் அதில் அழகான கண்களும் அமைந்துவிடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சுக்கிரனோடு சனி இனைவு பெற்றவர்களுக்கு கண்கள் சிறியதாக இருக்குமாம். பார்வை குறைபாடு உள்ளவர்கள் அணியும் லென்ஸ் எனும் கண்ணாடியின் காரகரும் சுக்கிரன்தான்.
கண் மருத்துவராகவோ அல்லது கண்ணாடி கடை (ஆப்டிகல்ஸ்) வைத்திருப்போர்களுக்கும் சுக்கிரன் பலமாக இருந்து தொழில் மற்றும் ஜீவன ஸ்தானதான பத்தாமிடத்திற்க்கும் தன ஸ்தானமான இரண்டாமிடத்திற்க்கும் தொடர்பு கொண்டிருப்பார் என்கிறது பாரம்பரிய ஜோதிட நூல்கள்.
இரண்டாம் வீடு வலக்கண்ணையும் பன்னிரெண்டாம் வீடு இடக்கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். பலமான சுப தொடர்பு பெற்ற இரண்டாம் வீட்டதிபதி அமையபெற்றால் அழகான ஆரோக்யமான கண்கள் பெற்றிருப்பர். ஆனால் இரண்டாம் வீடு அல்லது இரண்டாம் வீட்டதிபதி 6/8/12 பாவ தொடர்பு பெற்றுவிட்டால் கண்களில் ஏதாவது ஒரு குறைபாடு ஏற்பட்டுவிடும்.
சந்திரன் பன்னிரெண்டாம் வீட்டில் அமைந்தால் இடது கண்ணிற்க்கும் சூரியன் பன்னிரெண்டாம் வீட்டில் அமைந்தால் வலது கண்ணிற்க்கும் பாதிப்பு ஏற்படும்.
இரண்டாம் இடத்திலும் - பன்னிரெண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து இந்த இடத்து பலமில்லாமல் இருந்து சூரியனும் சந்திரனும் பாதிக்கபட்டு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதகிக்கோ கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும் .
1.சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும்.சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும். சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும்.
2.பலமிழந்த நீசம் பெற்ற சந்திரன் சனி தொடர்பு பெற்று குரு தொடர்பு பெறாமலிருந்தாலும் பார்வையிழப்பு ஏற்படும்.
3. சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்க்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
4.சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது மாலைகண் நோயை ஏற்படுத்தும்.
5. கும்ப லக்னமாகி சந்திரன் 6ம் வீட்டதிபதியாகி வக்கிரம் பெற்ற கிரகம் நின்ற ராசியில் இணைவு பெற்றால் விபத்தினால் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
6. எந்த கிரகம் 6ம் வீட்டதிபதியாகி வக்கிரம் பெற்ற கிரகத்துடன் இணைவு பெற்றாலும் பார்வை இழப்பு ஏற்படும்.
7.சூரியனும் சந்திரனும் 2/12 ஆக அமைவது நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
8.நீசம் பெற்ற சந்திரன் 6ம் வீடு அல்லது 12ம் வீட்டில் அசுப கிரகங்களுடன் சேர்ந்து இருப்பது அல்லது தொடர்புடன் இருப்பது.
9. லக்னாதிபதி 6/8/12ம் வீட்டில் இருப்பது, அசுபர்களின் வீட்டில் இருப்பது மற்றும் ராகு/கேதுவுடன் இனைந்து நிற்ப்பது.
10. செவ்வாய் சந்திரனுக்கு 6மிடத்தில் நிற்ப்பது.
11. த்ரேகாண சக்கரத்தில் 2ம் வீட்டின் முதல் த்ரேகாணத்தில் அசுபர்கள் நிற்பது வலது கண்ணில் ஏற்படும் பார்வை குறைபாட்டையும், 12ம் வீட்டின் முதல் த்ரேகாணத்தில் அசுபர்கள் நிற்பது இடது கண்ணில் ஏற்படும் பார்வை குறைபாட்டையும் குறிக்கும்.
11.பிறவியிலேயே பார்வையற்று இருப்பது கர்ம வினையே என்றாலும் பார்வை இன்மைக்கான கிரஹ நிலை அமையப்பெற்று பல வர்க சக்கரங்களில் அந்த நிலை அமைவது உறுதி செய்கிறது.
11. கண் பார்வை குறைபாட்டிற்காண கிரக நிலை பெற்று சுக்கிரன் சுப தொடர்புகள் பெற்றிருந்தால் அவர்கள் கண்ணாடி (லென்ஸ்) அணிவதன் மூலம் பார்வையை பெற முடியும்.
13.பார்வை குறைபாட்டினை நீக்க ஆங்கில மருத்துவத்தில் விட்டமின் A மிக முக்கியமனது என்கிறது. விட்டமின் Aவின் காரக கிரகம் சூரியன் என்பது குறிப்பிட தக்கது.
14. லக்னத்திற்க்கு 12ல் செவ்வாய் நிற்பது மற்றும் 2ல் சனி நிற்பது கண்களில் காயங்கள் ஏற்பட்டு அதனால் பார்வை இழ்க்குக் நிலை ஏற்ப்படும்.
14. இரண்டு /பன்னிரெண்டாம் வீட்டதிபதிகள், சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரஹங்கள் நவாம்சத்தில் நீசம் அடைந்து அசுபர்களின் சேர்க்கை பெறுவது, முக்கியமாக மாந்தியுடன் சேர்ந்து நிற்பது ஆகியவை விபத்தினால் காயங்கள் ஏற்பட்டு பார்வை இழ்ப்பு ஏற்பட செய்கிறது.
வயதானவர்களுக்கு கண் ஆபரேஷனுக்கு உதவுவது, பார்வை கண்ணாடி வாங்கி கொடுப்பது.
கும்பகோணத்திற்க்கு அருகிலுள்ள நவகிரஹ ஸ்தலங்களில் சூரியனுக்குறிய சூரியனார் கோயில், ஆடுதுறை சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு ரவிஸ்வரர் கோயில் சென்று வழிபடுவது, ஆதித்ய ஹிருதயம், சூரிய மாலை முதலிய ஸ்லோகங்களை பாராயணம் செய்வது, சூரிய நமஸ்காரம் செய்வது.
மற்றும் சந்திரனுக்குறிய திங்களுர், திருப்பதி ஆகிய ஸ்தலங்களில் உலகை காக்கும் கடவுளான ஸ்ரீ மஹாவிஷ்னுவின் சரிரத்தில் இரு கண்களை குறிக்கும் நக்ஷத்திரமான மிருஹசீர்ச நக்ஷத்திர நாளில் சென்று வணங்குவது பார்வை கோளாறு நீங்க வழி செய்யும்.
காஞ்சிபுரத்திலுள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் மருந்தீஸ்வரர் விருந்தீஸ்வரர் கோயிலும் கண் நோய்களுக்கான சிறந்த பரிகார ஸ்தலமாகும்
கேரளாவில் உள்ள மீன் குளத்தி பகவதியம்மன் கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில்களும் அழகிய மீன் போன்ற கண்கள் அமைய ப்ரார்தனை தலங்களாகும்.
தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒன்றாகும்.
மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான்.
என்றாலும் பிறப்பிலேயே பார்வை இழந்தவர்களுக்கு கர்ம வினையே காரணம் என்பதால் அவர்களுக்கு பரிகாரம் ஏதுமில்லை.