கார்த்திகை மாதம் மண்டல பூஜைக்கு சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யப்போறீங்களா? -ஆன்லைன் புக்கிங் ஆரம்பம்
கார்த்திகை மாதம் மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது.
பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்கு சாமி தரிசனம் செய்யப்போகும் பக்தர்களுக்காக ஆன்லைன் முன்பதிவு தரிசனம் தொடங்கியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல-மகர விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தினசரியும் 25000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணைவதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.
ஐயப்பன் சபரிமலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். சபரிமலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

ஐயப்பன் கோவில்
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்திருக்கப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள்மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5வது நாளன்று நடை சார்த்தப்படும். ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.

கட்டுப்பாடுகளுடன் யாத்திரை
சபரிமலை யாத்திரைக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஐயப்பன் கோயில் மற்றும் அதன் வளாகத்தில் தயாராக உள்ளன. கொரோனா பரவல் இல்லாத, பாதுகாப்பான தரிசனத்தை பக்தர்களுக்கு உறுதிசெய்வதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் தேவஸ்வம்போட்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்
பம்பை மற்றும் எருமேலியில் மருத்துவ வசதிகள், ஆர்டிபிசிஆர் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை நடை திறப்பு
இந்த ஆண்டு சாமி தரிசனம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 2021 -22 மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக 17ஆம் தேதி முதல், தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன் பதிவு அக்டோபர் 11ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நெகட்டிவ் சான்றுகள்
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஐயப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பையில் குளிக்கலாம்
கடந்த ஆண்டு ஆண்டு பம்பா நதியில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் பம்பை நதியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு, நதிக்கரையிலேயே ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, பம்பா நதியில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் நடந்து சபரிமலை செல்லவும் அனுமதி இல்லை. கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்திவிட்டு கே.எஸ்.ஆர்.டி.சி அரசுப் பேருந்தில் பம்பா செல்ல வேண்டும்.

அபிஷேக நெய் பிரசாதம்
இந்த ஆண்டு 10 வயதுக்கு கீழும், 65 வயதுக்கு மேலும் உள்ள பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் கொண்டு செல்லும் நெய், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சந்நிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications