சனிபகவான் நல்லவரா? கெட்டவரா?... ஏழரை சனி பிடித்தாலும் கவலை வேண்டாம் - கவனமாக இருங்க
சனிபகவான் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே சனிபகவானின் பிடியில் தான் உள்ளது. எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. நம்மை திருத்தும் தெய்வம்.
சென்னை: நவ கிரகங்களில் சனி பகவான் எல்லாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார்.ஒருவரின் லக்கினத்திற்கு சனி யோககாரராக இருந்து அவர் இருக்கும் இடமும் வலுவாக இருந்து அந்த தசாபுத்தி மட்டும் வந்தால் போதும் குப்பையில் கிடந்தவரும் கோபுரத்தில் ஏறிவிடுவார் மனித மனம் பக்குவப்பட்டு, பரம்பொருளை நெருங்க காரணமாய் இருக்கும் சனீஸ்வரன் நல்லவரே! சனி பகவான் நம்மை தண்டிக்கும் தெய்வம் அல்ல. நம்மை திருத்தும் தெய்வம்.
சனிபகவான் நீதிமான். இவர் அரசனை மட்டும் இல்லை அனைத்து மனிதனையும் தண்டிப்பவர். இவரிடம் எந்த அமைச்சரின் சிபாரிசும் எடுப்படாது. சிவனா இருந்தாலும் எமானாக இருந்தாலும் எவனாக இருந்தாலும் சனியின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. எல்லோருக்கும் ஒரே தீர்ப்புதான். அரசனை ஆண்டியாகவும் ஆண்டியை அரசனாகவும் மாற்றுவார்.
மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்குதான் அதனால் இவரின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே இவரின் பிடியில் தான் உள்ளது. எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. நம்மை திருத்தும் தெய்வம். இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நம்மை சாதிக்க செய்வது நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள்.
புகழின் உச்சம்
ஒருவர் தனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்று குரு பகவானிடம் வேண்டினால் அவர் சனியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார். சனி தனது ஆதிக்க காலமான இரண்டரை ஆண்டு காலத்தில் அவரை எவ்வளவு கடினமான உழைப்பை கொடுக்கமுடியுமோ கொடுத்து விடுவார். உழைப்பின் மறுபக்கம் வெற்றிதானே. இரண்டரை ஆண்டு உழைப்புக்கு பிறகு குரு பகவான் அவருக்கு தேவையான வெற்றி மற்றும் முன்னேற்றத்தை தந்து புகழின் உச்சத்தை எட்ட வைத்துவிடுவார்.
சனிக்கு பிடித்த உழைப்பாளர்கள்
சனி பகவானுக்கு தெரிந்ததெல்லாம் "உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்பதுதான். உழைப்பவர்கள் எல்லாம் சனி ஆதிக்கம் நிறைந்தவர்கள். உழைப்பவர்களைதான் சனீஸ்வரபகவானுக்கும் பிடிக்கும். கடின உழைப்பாளிகள் எல்லோரும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்றவைகளால் பாதிக்கப்படுவதில்லை. சனி உழைப்பின் பிரியர் என்பதால் அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் உண்மை.
உழைப்பாளிகள் யார்
கால புருஷ ராசியான மேஷத்திற்கு சனீஸ்வர பகவான் கர்மஸ்தானாதிபதியாகிறார். எனவே மேஷ ராசி மற்றும் லக்ன காரர்கள் பொதுவாகவே கடுமையான உழைப்பாளிகளாக விளங்குவர். துலா லக்னத்தில் சனி உச்சம் பெறுவதால் துலா ராசி மற்றும் லக்ன காரர்கள் எப்போதும் ஓடி ஓடி அடுத்தவர்களுக்காக உழைத்து உழைத்து ஓடாகும் ராசிகாரர்கள் ஆவர்.
ஆயுள் ஸ்தானதிபதி
ஜாதகத்தில் எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் சனீஸ்வரரை தவிர எந்த கிரகம் நின்றாலும் அந்த கிரகமும் பாதிப்புக்குண்டாகி ஆயுளுக்கும் பிரச்சனை ஏற்படுத்திவிடுவர். ஆனால் சனீஸ்வர பகவான் எட்டில் நின்றால் ஆயுளை கூட்டுவதோடு காரகோ பாவநாஸ்தி எனும் தோஷத்திருந்தும் விதிவிலக்கு பெறுகிறார்.
எட்டாம் எண்ணும் சனிபகவானும்
எட்டாம் எண்ணை கண்டால் கெட்டது சனி என்று பயப்படுகிறார்கள் எட்டாம் எண்ணிற்குரியவர்கள் கடின உழைப்பாளிகள். ஒவ்வொரு எண்ணும்,ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்தியத்தில் இருக்கும். 8ஆம் எண்ணுக்குறிய கிரகம் சனி.பொதுவாகவே சனியின் மீது யாருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. மற்றவரை திட்டுவதற்கு இவரை இழுக்காமல் இருக்கமாட்டார்கள். அதனால்தான் 8ஆம் எண் மேல் பெரும்பாலனவர்களுக்கு வெறுப்பு.
எட்டுக்கு உரிய சிறப்பு
தசாவதாரங்களில் பகவான் கிருஷ்ணன் பிறந்த தினம் எட்டு. அஷ்டமி திதி எட்டாவது திதி திருமாலின் திருநாமம் (ஓம் நமோ நாராயணாய) என்பது எட்டெழுத்து. திருமாலின் மார்பில் வசிக்கும் செல்வத்தை குறிக்கும் லட்சுமி, அஷ்ட லட்சுமிகளாக இருந்து செல்வத்தை வாரி வழங்குகிறாள். திக்குகள் எட்டு. அஷ்ட திக் பாலகர்கள் அஷ்ட வசுக்கள், சிவஸ்வரூபங்கள் எட்டு என இப்படி எட்டுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கின்றன.
சனி தரும் யோகம்
அறிவியல் மேதைகள்,விஞ்ஞானிகள்,ஆராய்ச்சியாளர்கள்,பிரபல இயக்குனர்கள் போன்றவர்கள் 8ஆம் எண் ஆதிக்கத்திலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். 8,17,26 போன்ற எட்டாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சனி யோககாரராக இருப்பார். இவர்கள் பெரும்பாலும் மன உறுதி படைத்தவர்களகவே இருப்பார்கள்.மேலும் எந்தவித காரியங்களையும் பொறுமையுடன் செய்வார்கள்.
நல்லவருக்கு நல்லவர் சனிபகவான்
மகர கும்ப ராசிகளுக்கு சனீஸ்வர பகவான் அதிபதி ஆவதால் மகர கும்ப ராசி மற்றும் லக்ன காரர்கள் கடும் உழைப்பாளிகள். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் 10ல் சனி நின்றுவிட்டால் அவர்கள் உழைப்பால் முன்னேறிய உத்தமர்களாக இருப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவத்தில் சனி நின்றுவிட்டால் அவர்கள் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என உழைக்கும் வர்கமாக இருப்பார்கள். இந்த உலகத்தில் பேரும் புகழும் அடைந்த அத்தனை பேரின் ஜாதகத்திலும் சனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். சனிபகவான் கெட்டவர்களுக்கு மட்டுமே கெட்டவர் நல்லவருக்கு நல்லவர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே மக்களே ஏழரை சனி பிடித்தாலும் கவலை வேண்டாம் சனி நல்லதே செய்வார் என்று நம்பிக்கையோடு இருங்கள்.