"இப்படியே இருக்கணும்"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (14)
- சுதா அறிவழகன்
மழை சற்றே வேகம் பிடித்தது.. இருவரது காதலும் மேலும் இறுகியது.. இப்போதுதான் மழைத்துளி அவர்களை உந்தித் தள்ளியது.. போதும்டா நனைஞ்சது என்று உணர்வுக்குள் மணி அடிச்சது.
"ப்ரீத்தி போதும்.. ரொம்ப நனைஞ்சா உடம்புக்கு முடியாமப் போய்ரப் போகுது.. உள்ளே போலாமா"
"போகணுமா"
"போகணும்ல"
"இருக்கணும் போல இருக்கே"
"இப்படியேவா"
"ஆமா"
"எவ்வளவு நேரம்"
"வாழும் காலம் முழுசும்"
"அது போதுமா"
"அடுத்த ஆறு பிறவியிலும்"
"ஒரு வேளை இது 7வது பிறவியாயிருந்தா"
" வேற எந்த பிறப்பு எடுத்தாலும் உன் கூட வந்து சேருவேன்"
"அவ்வளவு பிடிக்குமா என்னை"
"உன் உயிரின் அடி நாதமாக மாறிட்டேன் எப்பவோ"
"நீ கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்"
"அதை நான் சொல்லணும்"
"ரெண்டு பேரும்தான்"
"இந்த நொடியில் அப்படியே செத்துப் போய்டணும் சுனில்"
"நோ.. தப்பு.. வாழ்க்கையின் அத்தனை சந்தோஷங்களையும் விட நாம் வாழப் போவதுதான் மிகப் பெரிய சந்தோஷம்னு உலகம் சொல்லணும்"
"உன்னை சந்தோஷப்படுத்தறேனா"
"என் உயிராக மாறிட்டியே.. வேற என்ன இதை விட சந்தோஷம் இருக்கு"
"எல்லாத்துக்கும் காரணம் அந்த தக்காளிதான்"
"ஹிஹிஹிஹிஹி.. ஆமாடா"
"மழையில் நனைஞ்சிட்டே இப்படியே இருக்கணும்"
"இருக்கலாம்.. ஆனால் சளி பிடிச்சிக்கிட்டா"
"யூ நாட்டி.. பாய்.. ரொமான்ஸிலும் உனக்கு ஜோக்கா"
" லவ்யூ டா ப்ரீத்திம்மா"
"லவ்யூ டூ டா சுனில் பையா"
ஜோவென வேகம் எடுத்துக் கொட்டிய மழைக்கு மத்தியில் மெல்ல எழுந்து உள்ளே சென்றனர் சுனிலும், ப்ரீத்தியும்.. இருவரது மனதிலும் அத்தனை நிம்மதி, சந்தோஷம், உற்சாகம், நம்பிக்கை...!
மருத்துவமனைக்குள் மெல்ல அந்தக் கார் நுழைந்தது.. காருக்குள் மலர்விழி.. இருவரையும் பார்த்தபடி....!
சுனிலும், ப்ரீத்தியும் தலையை துவட்டிக் கொண்டனர். சுனில் தனது செல் போனை எடுத்துக் கொண்டு வராண்டா பக்கம் ஒதுங்கினான்.. ப்ரீத்தி அம்மாவைப் பார்க்க சென்றாள்.
வராண்டாவுக்கு வந்த சுனில், அம்மாவுக்குப் போனைப் போட்டான்
"ஹலோ.. ம்மா.. என்ன பண்றே"
"சொல்லுடா.. சும்மாதான் உக்காந்திருக்கேன்.. நீ எப்போ வருவே... போரடிக்குதுப்பா"
"வந்துர்றேம்மா.. அப்றம் ஒரு விஷயம்மா"
"சொல்லு"
"ம்மா.. என்னோட பிரண்ட்ம்மா.. பொண்ணு.. அவங்களுக்கு உடம்பு சரியில்லை. அவளோட அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை.. ஒரு பத்து நாள் நம்ம வீட்ல வச்சுப் பார்க்கலாமா.. அவங்க ரெண்டு பேர்தான். அம்மா வயசானவங்க.. தனியா சமைக்க முடியாது.. அதான் நம்ம வீட்டுல வச்சுப் பார்க்கலாமான்னு.. நீ என்னம்மா சொல்றே"
"எப்படிடா.. வயசுப் பொண்ணை எப்படி ஆம்பளைப் பையன் இருக்கிற வீட்டுல வச்சுக்க முடியும்.. தப்பா போயிராதா"
"என்னம்மா நீ .. நீயே இப்படி சொன்னா எப்படி.. ஊர் உலகம் ஆயிரம் பேசும்மா.. நீ என்ன சொல்றே"
"நான் இல்லடா.. யாருமே யோசிக்கத்தான் செய்வாங்க.. எப்படி இது சரியா இருக்கும்"
"அய்யோ.. ம்மா.. நான் வாக்கு கொடுத்திட்டேனே"
"யாரைக் கேட்டு கொடுத்தே.. என் கிட்ட கேட்டியா"
"ம்மா.. சரி.. இப்ப என்னதான் சொல்றே"
"நீதான் முடிவு பண்ணிட்டுதானே என் கிட்ட வந்து சோப்பு போடுவே.. சரி கூட்டிட்டு வா.. வேற என்ன பண்ண"
"ஹிஹிஹி.. சூப்பர்ம்மா.. எங்கம்மன்னா அம்மாதான்"
"டேய் டேய் நீ யார்னு எனக்குத் தெரியும்.. நான் யார்னு உனக்குத் தெரியும்.. ஆமா.. யார் அவங்க எங்க இருக்காங்க"
"இங்கதாம்மா.. அந்தப் பொண்ணுக்கு ஆக்சிடன்ட்.. ஹாஸ்பிட்டல்ல இருக்கா.. அம்மாதான் கூட பாத்துக்கிட்டாங்க.. அவங்களுக்கு திடீர்னு பிபி ஏறி.. சரி.. நான் வீட்டுக்கு வந்து மத்த கதையைச் சொல்றேன்.. நீ டிபன் மட்டும் ரெடி பண்ணி வை.. இட்லி பண்ணுமா.. சரியா இருக்கும்.. நான் வந்துர்றேன்"
"சரிடா சரிடா.. நார்மலா இருடா"
சிரித்தபடி போனை அமர்த்தினான் சுனில்.. மனசுக்குள் ஒரு இனம் புரியாத நிம்மதி, சந்தோஷம்.. ஹப்பா.. அம்மா கிட்ட கொண்டு போயாச்சு.. அடுத்தடுத்து நினைச்சபடி நடந்துட்டா.. நினைக்கவே ஹேப்பியாக உணர்ந்தான் சுனில்.
ப்ரீத்தியிடம் இந்த செய்தியைச் சொல்ல அவளது அம்மா இருந்த அறைக்கு விரைந்தான்.
"என்ன சுனில் செம ஹேப்பியா போறீங்க"
திடீரென குறுக்கிட்ட குரல்.. திரும்பிப் பார்த்தால் மலர் விழி.
"ஹாய் மலர்.. அப்படில்லாம் இல்லை"
நின்றான்.. நிற்காமல் போனால் விட மாட்டாளே..
"இல்லை.. மழையில் நல்லா நனைஞ்சுட்டிங்க போல..." அந்த நனைஞ்சுட்டீங்க என்ற வார்த்தையை மட்டும் சற்று அழுத்தியே குறிப்பிட்டாள் மலர்விழி.. அது சுனிலுக்கும் புரியாமல் இல்லை.. பாத்துட்டா போல கழுகுக் கண் காரி என்று மனசுக்குள் கடுப்பாக கூறிக் கொண்டபடி..
"ஆமாமா.. ப்ரீத்தியும் நானும் சேர்ந்து நல்லாவே நனைஞ்சுட்டோம்" என்று பதிலுக்கு கூடக் கொஞ்சம் கடுகை எடுத்துக் கொடுத்தான்.. மலர் விழிக்கு.. நக்கல்தான் அவனுடன் பிறந்ததாச்சே. பட் அவனது இந்த குத்தல் பேச்சை மலர்விழி எதிர்பார்க்கவில்லை. துணுக்குற்றாள்.
இருந்தாலும் அவள் விடவில்லை
"இப்பெல்லாம் ப்ரீத்தியோட நிறைய நேரம் ஸ்பெண்ட் பண்ற மாதிரி இருக்கே"
"என்ன பண்றது மலர்.. அப்படி ஆயிப் போச்சு.. நல்ல பொண்ணு அவங்க"
"ஓ அப்படியா பார்த்தாலே தெரியுது.. சுனிலையே தன் பக்கம் கொண்டு வந்துட்டாங்களே"
"ஹாஹாஹா.. அப்படியெல்லாம் இல்லை.. நான்தான் அவங்க பக்கம் போயிட்டேன்"
"ஓ.. கதை அப்படிப் போகுதா..."
"போகட்டுமே.. நல்லாதானே இருக்கு"
"ஓ.. சூப்பர் சுனில்.. என்ஜாய்.. நான் வர்றேன்" என்று கூறியபடி விலகிச் சென்றாள்.
அவள் போவதையே லேசான புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த சுனில்.. ப்ரீத்தியைப் பார்க்க விரைந்தான்.
ப்ரீத்தியின் அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றது.. ஒரு அலறல் குரல்.
"அம்ம்ம்ம்ம்மா.."
(தொடரும்)
பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ]