மதுரை மன்னர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய தமிழ் இணையப் பயிலரங்கம் 17.6.2012 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5:30 வரை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்க விழாவில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.
தே.எடிசன் ராஜா, வே.செல்வம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ப.க. மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகவுரையாற்றினார்.
குடியரசுத் தலைவரின் "செம்மொழி இளம் அறிஞர் விருது" பெற்ற புதுச்சேரியைச் சார்ந்த பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழ் இணையம் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, மின்னஞ்சல் பயன்பாடுகள், வலைப்பூ உருவாக்கம், பயன்பாடு, தமிழ் விக்கிபீடியா, இணைய இதழ்கள் போன்ற தலைப்புகளில் பாடம் நடத்தினார். பங்கேற்ற மாணவ மாணவிகள் கணினி செயல்முறை வகுப்புகளின் மூலம் தமிழில் இணையதளத்தைப் பயன்படுத்தவும், தமிழில் உள்ள இணையதளங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக இப்பயிலரங்கம் அமைந்தது.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நம்.சீனிவாசன், பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத்தலைவர் க.நல்லதம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பங்கேற்பாளர்கள் சார்பாக சுசீலா வேல்முருகன், கவிஞர் கோ ஆகியோர் தாங்கள் பயன்பெற்றது பற்றி கருத்துக் கூறினர். பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி, ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன் சிறப்புரையாற்றினார். அ.வேல்முருகன் நன்றி கூறினார்.